மணல் திருடர்களைப் பிடிக்கச் சென்று, மாட்டு வண்டியை ஓட்டிக்கொண்டு திரும்பிய போலீசார்!!

 

-MMH

கொசஸ்தலை ஆற்றில் மணல் திருடும் கும்பலைப் பிடிக்கச் சென்ற போலீசாரை பார்த்தும் மணல் திருடர்கள் தப்பியோடிய நிலையில், மணலுடன் மாட்டு வண்டியைப் பறிமுதல் செய்த போலிசார், மாட்டு வண்டியை காவல் நிலையம் ஓட்டிச் சென்ற சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ராம தண்டலம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றில் மாட்டு வண்டிகளில் மணல் திருடுவதாக போலீசாருக்குப் புகார் வந்தது.

பட்டப்பகலில் மணல் திருடும் தகவல் அறிந்த புல்லரம்பாக்கம் காவல்துறையினர், தலைமைக் காவலர் பாஸ்கரன் தலைமையில் கொசஸ்தலை ஆற்றின் ஓரம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது சிலர் கரையோரத்தில் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தனர். மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் மணலையும், மாட்டு வண்டியையும் அப்படியே விட்டு விட்டு, ஓட்டம் பிடித்தனர்.

இதையடுத்து அங்கிருந்த மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், அந்த மாட்டு வண்டியை ஓட்ட யாரும் இல்லாததால் போலீசாரே மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு காவல் நிலையம் சென்றனர்.

மாட்டு வண்டியை புல்லரம்பாக்கம் காவலர் கலையரசன் ஓட்டிச் செல்ல, காவலர் பாஸ்கரன் அமர்ந்து உற்சாகமாகச் சென்றனர். சுமார் 10கிமீட்டர் போலீசாரே சீருடையில் மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஆச்சரியமடைந்தனர். மணல் திருட்டில் ஈடுபட்டு தப்பியோடிய நபர்களை, வழக்குப்பதிவு செய்து புல்லரம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

-பாரூக், சிவகங்கை.

Comments