தனியார் பாதுகாப்பே போதும்!! - தீபா வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தகவல்!

 

     -MMH

     சென்னை: பாதுகாப்புக்கு இவ்வளவு தொகையா என்று தனக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று தீபா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், ஜெயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக்கை சட்டப்பூர்வ வாரிசுகளாக அறிவித்து, 188 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்கியது.

அத்துடன், அவர்களின் சொந்த செலவில் அரசு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி,எம்.எஸ் ரமேஷ் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தீபக்கிற்கு பாதுகாப்பளிக்க காவல்துறை தயாராக உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அதற்கான முன்பணமாக இருவரும் சேர்ந்து 6 மாதத்திற்கு 20.83 லட்சத்தை செலுத்துமாறு காவல்துறை ஆணையர் சார்பில் இரண்டு மாதங்களுக்கு முன்பே கடிதம் அனுப்பியும், இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை என அரசு வழக்கறிஞர் கூறினார்.

தீபக் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், காவல்துறை கடிதத்துக்கு பதில் அளிக்க இருப்பதாக தெரிவித்தார். ஆனால், தீபா தரப்பு வழக்கறிஞர், தனக்கு காவல்துறை பாதுகாப்பு வேண்டாமெனவும், தனியார் பாதுகாப்பை அமர்த்தி கொள்வதாகவும் தெரிவித்தார். இதனையடுத்து தொடர்ந்து இருதரப்பு வாதத்தையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

-பாலாஜி தங்கமாரியப்பன், 

சென்னை போரூர்.

Comments