டெல்லி – காத்மாண்டு இடையே தினசரி ஒரு விமான சேவையை இயக்க முடிவு!!

 

     -MMH

    புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா அச்சுறுதுதல் காரணமாக கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் சர்வதேச விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மேலும் இந்த உத்தரவு வரும் டிசம்பர் 31-வரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் தாயகம் திரும்பவும், இங்குள்ள வெளிநாட்டினர் அவர்கள் நாட்டுக்கு திரும்பவும், வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் சிறப்பு சர்வதேச விமானங்கள் இயக்கப் படுகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தியா – நேபாளம் இடையே மீண்டும் விமான சேவையை தொடங்குவது குறித்து நேபாள அரசுக்கு மத்திய அரசு பரிந்துரைத்து இருந்தது. தற்போது இந்த விமான சேவையை தொடங்குவதற்கு நேபாள அரசு ஒப்புதல் அளித்து உள்ளது.

இதன்படி கொரோனா மருத்துவ நெறிமுறைகளை பின்பற்றி முதல் கட்டமாக இருநாட்டு தலைநகரங்களான டெல்லி – காத்மாண்டு இடையே தினசரி ஒரு விமான சேவையை இயக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த விமானத்தில் உரிய விசா வைத்திருப்பவர்கள், இருநாட்டு குடிமக்கள், இந்திய குடியுரிமை பெற்றவர்கள், இந்திய வம்சாவளியினர் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

-சுரேந்தர்.

Comments