தொலைந்துபோன இளம்பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்குப்பின் பட்டதாரியாக காவல்துறை மீட்பு!!

     -MMH

    மதுரை: தொலைந்துபோன இளம்பெண்ணை இரண்டு ஆண்டுகளுக்குப்பின் பட்டதாரியாக காவல்துறை மீட்டு, செல்போனில் வீடியோ காலில் பேசவைத்ததால் பெற்றோர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.  

எல்லிஸ் நகர் பகுதியை சேர்ந்த திவ்யா என்ற 24 வயது இளம்பெண்ணுக்கு கடந்த 2017ஆம் ஆண்டு கருமாத்துர் பகுதியை சேர்ந்த உறவினர் குடும்பத்து இளைஞருடன் பெற்றோர்கள் திருமணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2019ல் தனது தாயின் வீட்டிற்கு திரும்பி இருக்கிறார் திவ்யா. இருவரையும் சேர்த்து வைக்க பெற்றோர்கள் முயற்சித்த காரணத்தால் தனது வீட்டில் இருந்து திவ்யா வெளியேறியுள்ளார். இதையடுத்து கடந்த 2019 மே மாதம் எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு இளம்பெண் திவ்யாவை காவல்துறையினர் தேடிவந்தனர்.

இதனிடையே மதுரை மாநகரில் நீண்ட நாட்களாக காணாமல் போனவர்களை கண்டறியும் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஹேமமாலா தலைமையிலான சிறப்புப் படையினருக்கு வழக்கு மாற்றப்பட்டது.

இதனையடுத்து திவ்யாவை தேட தொடங்கி இருக்கின்றனர். அதன்படி, அவரது செல்போனில் அடிக்கடி பேசிய விவரங்களை சேகரித்து அதைவைத்து, நடத்தப்பட்ட விசாரணையில் தனக்கு தெரிந்த பெண் ஒருவர் மூலமாக ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்று அங்கு ஆசிரியர் படிப்பு படித்து வருவதாக கூறியிருக்கிறார். அவரை சமாதானப்படுத்தி பெற்றோரிடம் செல்போன் மூலமாக வீடியோவில் காவல்துறையினர் பேச வைத்தனர்.

திவ்யா மற்றும் அவரது பெற்றோர்கள் வீடியோ காலில் பேசியபோது கண்கலங்கிய படி கதறி அழுதனர். இதையடுத்து காவல்துறை சார்பில் திவ்யாவை பெற்றோரிடம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போய்விட்டதாக நினைத்த தனது மகளை காவல்துறையினர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு கண்டுபிடித்து கொடுத்ததோடு தன் மகள் பட்டதாரியாக இருப்பதை நினைத்து மனம் நெகிழ்ந்தனர் திவ்யாவின் பெற்றோர்.

-சுரேந்தர்.

Comments