கோவிலில் பிரியாணி திருவிழா! பக்தர்களுக்கு பிரியாணி அன்னதானம்..!

 

-MMH

மதுரை திருமங்கலத்தை அடுத்த வடக்கம்பட்டியில் உள்ள ஸ்ரீமுனியாண்டிசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று திருவிழா நடைபெறுவது வழக்கம்.

85 ஆவது ஆண்டாக நடைபெறும் இத்திருவிழா, இந்த ஆண்டுக்கான விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவினை முன்னிட்டு பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருப்பார்கள். விரதமிருக்கும் பக்தர்கள் சுவாமிக்கு பால்குடம் எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.


தொடர்ந்து வெள்ளிக்கிழமை மாலை பூத்தட்டு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் நிலைமாலையுடன் பக்தர்கள் அனைவரும் தங்களது இல்லங்களிலில் இருந்து எடுத்துவந்த தேங்காய், பழம், பூ தட்டுகளை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர்.


 தமிழ்நாடு, ஆந்திரா,  கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் முனியாண்டிவிலாஸ் உணவகம் நடத்தி வரும் உரிமையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் விழாவில் பங்கேற்றனர்.

பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150ஆடுகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கோழிகள் முனியாண்டி சுவாமிக்கு பலியிடப்பட்டு,  அசைவ பிரியாணி தயார் செய்யப்பட்டது. பின்னர் அந்த பிரியாணி கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு சனிக்கிழமை காலை முதல் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments