வளர்ந்த நாடு! கடைசியில் நேர்ந்த சோகம்!

     -MMH

     ஒரு காலத்தில் மிகவும் செல்வச்செழிப்பான இடமாக இருந்த ஒரு தீவு, அதன் மக்கள் உழைக்காமல் இருந்த காரணத்தால், நாடே அகதிகள் முகாமாக மாறிய சோகக்கதை பற்றி தற்போது பார்க்கலாம்.

ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள மிகச்சிறிய தீவுதான் நவுரு. ஜனத்தொகை 12,000 மட்டுமே. தீவின் நீளம் 5 கி.மீ, அகலம் 3 கிமீ. 30 நிமிடத்தில் சுற்றி வரக்கூடிய நாடு. மீன்பிடித்தல், விவசாயம் என மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நாட்டுக்கு லாட்டரி அடித்தது.

அந்தத் தீவில் லட்சகணக்கான ஆண்டுகளாக பறவைகள் இட்டிருந்த எச்சங்கள் முழுக்க பாஸ்பேட் எனும் தாதுவாக மாறியிருந்தன.

பாஸ்பேட், சர்வதேச சந்தையில் ஏராளமான விலைக்கு போகும் பொருள். தீவில் கணக்கு, வழக்கற்ற எண்ணிக்கையில் பாஸ்பேட் இருந்தது. அதன்பின் பன்னாட்டு கம்பனிகள் வந்து இறங்கின.

1968-ஆம் ஆண்டுக்கு முந்தைய நாட்கள்வரை, சாதாரண நாடாக இருந்த நவுரு, அதன்பிறகு, ஒரு பெரிய வரம் பெற்ற நாடாக உருமாறியது.

பாஸ்பேட்டை வெட்டி எடுத்ததில் அரசுக்கு ஏராளமான வருமானம் வந்தது. ஒரு கட்டத்தில் 10,000 பேர் மட்டுமே உள்ள நாட்டின் அரசிடம் 170 கோடி டாலர்கள் இருந்தன. கணக்குபோட்டால் நபர் ஒருவருக்கு ஒன்றரை லட்சம் டாலர். அதாவது நால்வர் அடங்கிய குடும்பத்துக்கு தலா ₹.1கோடி அரசால் கொடுத்திருக்கமுடியும்.

அந்தப் பணத்தை என்ன செய்தார்கள்?

எல்லாருக்கும் இலவசமாக உணவு, டிவி, எலெக்ட்ரானிக்ஸ் பெருட்கள் என வாங்கிக் கொடுத்தார்கள். அரசின் சார்பில் விமான கம்பனிகளை துவக்கினார்கள். ஹவாயி, நியூயார்க், சிங்கபூருக்கு எல்லாம் அரசின் சார்பில் இலவச விமானங்கள் பறந்தன.

ஒரே ஒரு நபருக்காக விமானம் சிங்கப்பூர் போன கதை எல்லாம் உண்டு. போர் அடித்தால் மக்கள் டோக்கியோ போய் காபி குடித்துவிட்டு வருவார்கள். ஆளே இல்லாத ஓட்டலில் 5 மில்லியன் டாலர் செலவு செய்து கலைநிகழ்ச்சிகள் நடத்தினார்கள்.

சுமார் 15 வருடம் உலகின் ஆடம்பரங்கள் அனைத்திலும் திளைத்து வாழ்ந்தார்கள். அதன் பின் திடீர் என ஒருநாள் பாஸ்பேட் தீர்ந்துவிட்டதுகம்பனிகள் விடைபெற்றார்கள். அரசின் வருமானம் நின்றது. விமானங்கள் நின்ற நாடுகளில் எல்லாம் கட்டணபாக்கி, சம்பளபாக்கி என விமானங்களை பறிமுதல் செய்தார்கள்.

மக்கள் உழைக்க முடியாத வண்ணம் மிக குண்டாக இருந்தார்கள். இளையதலைமுறைக்கு விவசாயம், மீன்பிடி என்றால் என்னவென்றே தெரியவில்லை.

பாஸ்பேட் சுரண்டபட்டு மண்ணும் விவசாயத்துக்கு தகுதியற்றதாக மாறிவிட்டிருந்தது. அதன்பின் வாழ்க்கை தரத்தை தக்கவைத்துக்கொள்ள அரசு தன் நாட்டு குடியுரிமையை காசுக்கு விற்றது.

அதன் விளைவு கள்ளக் கடத்தல்காரர்கள், அல்கொய்தா, மாபியா கும்பல்கள் எல்லாம் நவுரு வங்கியில் பணத்தை போட்டு கருப்பை வெள்ளை ஆக்கினார்கள்.

கடைசியாக உலகநாடுகள் நவ்ரு மேல் பொருளாதார தடை விதிக்க மக்கள் மறுபடியும் ஏழ்மை நிலைக்கு போனார்கள். இன்று உலகின் மிக ஏழ்மை நிரம்பிய நாடு நவ்ரு தான்.

உலகின் மிக குண்டானவர்கள், ஆரோக்கியகுறைவானவர்கள் இருக்கும் நாடாக நவ்ரு ஆகிவிட்டிருக்கிறது. ஆஸ்திரேலிய அரசு கொடுக்கும் நிதியுதவியால்தான் மக்கள் ஒருவேளை சோற்றை உண்கிறார்கள்.

50 வருடங்களாக உருவாக்கிய சொத்துகளை கட்டிகாக்க தெரிவது சம்பாதிக்க தெரிவதை விட முக்கியம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ரைட் ரஃபிக்.

Comments