மதுரை எய்ம்சுக்கு இன்னும் ஒப்பந்தமே போடப்படவில்லை! ஆர்டிஐ தகவலால் அம்பலம்!

 

-MMH

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதியைத் தரச் சம்மதித்துள்ள ஜைக்கா நிறுவனத்துடன் இதுவரை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை, எதிர்வரும் மார்ச் மாதம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது எனத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சி தகவல் தரப்பட்டுள்ளது.

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளைக் கடந்த 2019 ஜனவரி மாதத்தில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த மருத்துவமனை கட்டுமானத்திற்காக, ₹.1,264 கோடி நிதியை ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையான ஜைக்கா நிறுவனம் கடனாக வழங்குவதாகக் கூறப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் ஒப்பந்தமே கையெழுத்தாகவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், ₹.1,264 கோடி மதிப்பில் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என அறிவித்த பின்னர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாகியும் ஒரு செங்கலைக் கூட வைக்காத நிலையில், தற்போது மதுரையில் எய்ம்ஸ் அமைப்பதற்கான திட்ட மதிப்பீடும் ₹.2,000 கோடியாக உயர்ந்திருப்பதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

சொன்னது என்ன நடப்பது என்ன?

மதுரை திருமங்கலம் அருகே உள்ள தோப்பூரில் ஏய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார். முதல்வர் முன்னிலையில் அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கட்டி எழுப்பப்படும் என உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரை பணம் வழங்குவதாக உறுதி அளித்திருந்த ஜைக்கா நிறுவனத்திடம் நிதி எதுவும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்தப் பகுதியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் மற்றும் மண்பரிசோதனை பணிகள் நடைபெற்றது. இதற்கிடையே தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த பாண்டியராஜா என்பவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய சுகாதாரத் துறையிடம் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தொடர்பாக பல்வேறு தகவல்களை எழுப்பியிருந்தார்.

இந்தியாவில் உள்ள ஜைக்கா நிறுவனத்தின் அதிகாரிகள், ஜப்பானில் உள்ள நிர்வாகிகளுடன் கடந்த 24ஆம் தேதி ஆலோசனை நடத்தினர். அதில், மார்ச் மாதம் ஜைக்கா நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்திட வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. எய்ம்ஸ் அமைப்பதற்கான மொத்த செலவில் 85 சதவீதம் நிதி, அதாவது தோராயமாக ரூ. 2 ஆயிரம் கோடியை ஜைக்கா நிறுவனம் வழங்கும் எனவும் பதிலளித்துள்ளது.

எப்போதான் மருத்துவமனை வரும்..?

2022ஆம் ஆண்டு செப்டம்பரில் பணி நிறைவடையும் என உறுதியளிக்கப்பட்ட நிலையில் இதுவரையிலும் நிதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே இப்போதைய நேரத்தில் சுற்று சுவர் எழுப்பப்பட்டு, மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் நடைபெறுகின்றன.

எய்ம்ஸ் மருத்துவமனையைத் தமிழ்நாட்டில் அமைப்பது குறித்து மத்திய அரசு துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும், தற்காலிக கட்டிடங்களை அடையாளம் கண்டு, வரும் கல்வியாண்டில் எய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவ மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகளை முன் வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பாரூக்.

Comments