கொரோனா ஊரடங்கை மீறியவர்கள் மீதான 10 லட்சம் வழக்குகள் ரத்து! எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு!!

 

-MMH

     முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தென்காசி மாவட்டத்தில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். கடையநல்லூரில் பொதுமக்கள் மத்தியில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

மத்திய அரசு, கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுக்க கடந்த 25.03.2020 அன்று முதல் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததையடுத்து, தமிழக அரசும் பொதுமக்களின் நலனை கருதி ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதுடன், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் - 1939 மற்றும் தொற்று நோய் சட்டம் - 1937 ஆகிய சட்டங்களின் கீழ் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்தது.

இதனையடுத்து காவல்துறையினர், மாநிலம் முழுவதும் ஆங்காங்கு சோதனைச்சாவடிகள் அமைத்தும், வாகன தணிக்கை செய்தும் ஊரடங்கை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கைகள் மேற்கொண்டனர். மேலும், ஊரடங்கு உத்தரவை மீறியவர்கள், கொரோனா தொற்று தொடர்பாக வதந்திகளை பரப்பியவர்கள், உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பியவர்கள் ஆகியோர் மீது சட்டப்படியாக நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

இது தொடர்பாக, மாநிலத்தில் சுமார் 10 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இவ்வழக்குகளுள், வன்முறையில் ஈடுபட்டு குறிப்பிட்ட குற்றங்களுக்காக பதிவு செய்யப்பட்ட வழக்குகள், முறைகேடான வழிகளில் இ-பாஸ் பெற்று பயன்படுத்தியது மற்றும் காவல் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் போன்றவைத் தவிர மற்ற அனைத்து வழக்குகளிலும் பொதுமக்களின் நலன் கருதி மேல் நடவடிக்கைகள் கைவிடப்படுகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். முதலமைச்சரின் இந்த அறிவிப்பானது மக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-V.ராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments