ஒட்டுமொத்த யானைகளும் கோவையில் கூடியாச்சு...! அடுத்த 48 நாட்கள் அலப்பறைதான்..!!

-MMH

     கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த தேக்கம்பட்டியில் நாளை யானைகள் நலவாழ்வு புத்துணர்வு முகாம் துவங்கி 48 நாட்கள் நடைபெற உள்ளது. புத்துணர்வு முகாமிற்கு ஒரு கோடியே 67லட்சத்து 10 ஆயிரத்து 982 ரூபாய் நிதியைத் தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

முகாமில் பங்கேற்க இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான யானைகள் இன்று காலை முதலே மேட்டுப்பாளையம் வரத்துவங்கியுள்ளன. நாளை மாலை நடைபெற உள்ள துவக்க விழாவில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன், உள்ளாட்சித் துறை அமைச்சர், 

எஸ்பி வேலுமணி மற்றும் எம்எல்ஏக்கள் எம்பிக்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களும், இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.லாரிகள் மூலம் அழைத்து வரப்படும் யானைகள் அனைத்தும் முதலில் எடை பார்க்கப்பட்டு அதன் பின்னரே முகாமிற்குள் அனுமதிக்கப்படும். யானைகளின் உடல் எடை அதன் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்றவாறு உள்ளதா எனச் சோதனை செய்து முகாம் நடைபெறும்.

அதற்கேற்றவாறு எடை கூடுதலாக உள்ள யானைகளுக்கு எடை குறைக்கும் பயிற்சி, உடல் எடை குறைவாக உள்ள யானைகளுக்குச் சத்தான உணவு மற்றும் ஆயுர்வேத லேகியம், விட்டமின் மருந்துகள் வழங்கப்படும். முகாம் நிறைவடையும் போது யானைகளின் எடை மீண்டும் சரி பார்க்கப்பட்ட பின்னரே அனுப்பி வைக்கப்படும். நாளை மாலை முகாம் துவங்குவதை முன்னிட்டு இன்று காலை முதலே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் யானைகள் ஒவ்வொன்றாக மேட்டுப்பாளையம் வரத்துவங்கியுள்ளன.

நீண்ட நேரம் லாரியில் பயணித்து வந்ததால் முகாமில் நுழைந்ததும் யானைகளுக்கு அதற்கு பிடித்தமான பசுந்தீவனங்கள் வழங்கப்படுகின்றன. இவ்வாண்டு நடைபெறும் முகாமில் 21 யானைகள் பங்கேற்கும் எனத் தெரிகிறது. யானைகள் முகாம் நாளை துவங்கினாலும் இன்றே யானைகள் வரதுவங்கிவிட்டதால் முகாம் பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது. இன்று இரவுக்குள் அனைத்து யானைகளும் மேட்டுப்பாளையம் வந்தடைந்த விடும் எனத் தகவல் கிடைத்துள்ளது.

2012ஆம் ஆண்டு முதல் மேட்டுப்பாளையத்தில் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக யானைகள் நலவாழ்வு முகாம் நடத்தப்பட்டு வரும் நிலையில் நாளை இங்குத் துவங்கவுள்ளது ஒன்பதாவது முகாம் என்பது குறிப்பிடத்தக்கது.

-S.கிரி, தலைமை நிருபர்.

Comments