சசிகலாவை வரவேற்க ஓபிஎஸ் வருகிறாரா? எகிறும் எதிர்பார்ப்பு!

 

-MMH

சசிகலா சிறையிலிருந்தும், கொரோனாவிலிருந்தும் விடுதலையாகி பெங்களூரில் உள்ள பண்ணை வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இனிதான் அரசியல் பரபரப்பு காட்சிகள் அரங்கேறப் போகின்றன என அனைத்து திசைகளிலிருந்தும் குரல்கள் எழுந்துவருகின்றன.

சசிகலாவுக்கு ஆதரவாக ஆங்காங்கே அதிமுக நிர்வாகிகளே போஸ்டர்கள் ஒட்டுவதும், கட்சித் தலைமை அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் தொடர்ந்து வருகிறது. கர்நாடக மாநில அதிமுக செயலாளர் சசிகலாவை சந்திக்கச் சென்றதும், 

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக சந்திப்பு தவிர்க்கப்பட்டதும் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிமைப்படுத்துதல் நிறைவடைந்து அவர் தமிழகம் வந்தபின்னர்தான் அரசியல் அதகளம் ஆரம்பமாகும் என ஆருடம் கூறுகின்றனர் அரசியல் கணிப்பாளர்கள்.

இன்னும் சில தினங்களில் பெங்களூரிலிருந்து சசிகலா சென்னை திரும்ப உள்ள நிலையில் வரவேற்பு ஏற்பாடுகளை டிடிவி தினகரன் கவனித்து வருகிறார்.


 மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தபோது ஜெயலலிதா பயன்படுத்திய காரில் அதிமுக கொடியுடன் பவனி வந்த சசிகலா, அதிமுக தலைமையை பரபரப்புக்குள்ளாக்கினார். இந்நிலையில் தமிழக எல்லையிலிருந்து சென்னைவரை அமமுகவினர் கொடுக்கும் வரவேற்பும், பேனர்களும், அதில் இடம்பெறப்போகும் வரவேற்பு வாசகங்களும் அதிமுக தலைமையை டென்ஷனாக்கும் என்கிறார்கள்.

அமமுகவினர் மட்டுமல்ல, அதிமுகவினரும் இந்த வரவேற்பு ஏற்பாட்டில் கலந்துகொள்வார்கள் என்று கூறுகின்றனர் அமமுக வட்டாரத்தில். டிடிவி தினகரனோ இன்னும் ஒரு படி மேலே போய் சின்னம்மாவை வரவேற்க துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை எல்லையில் நிற்பார் என தமது நிர்வாகிகளுக்கு நம்பிக்கை வார்த்தை கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓபிஎஸ்ஸின் சமீபத்திய நகர்வுகள் அனைத்தும் இதற்கு வலு சேர்ப்பதாகவே உள்ளது.


டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி சசிகலாவை அதிமுகவில் சேர்க்க 100 சதவீதம் வாய்ப்பு இல்லை என்று பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தினார். எடப்பாடியின் கருத்தை வழிமொழிந்து அமைச்சர் ஜெயக்குமாரும் பேசிவருகிறார். ஆனால் பன்னீர் செல்வமோ இது பற்றி எந்த இடத்திலும் வாய் திறக்கவில்லை. மேலும் அவரது மகன் ‘மனிதாபிமான’ அடிப்படையில் சசிகலாவின் உடல்நலம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டார்.

அதிமுகவில் எடப்பாடியின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர் டிடிவி தினகரனோடு ஓபிஎஸ் ‘டச்’சில் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளிவரும் நிலையில், சசிகலா சென்னை திரும்பும் நாளை பல தரப்பிலிருந்தும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். பதவி பறிபோய்விடும் என்ற நிலையிலேயே அதிமுகவின் முக்கிய அமைச்சர்கள் பலரும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்து வருவதாகவும், பதவிக்காலம் முடிவடையப் போகும் நிலையில் சசிகலா பக்கம் அவர்கள் அனிவகுப்பார்கள் என்கின்றனர்.

அதிமுகவில் யார் எந்தப் பக்கம் போவார்கள் என பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்போது சில அமைச்சர்கள் பேசுவதை கணக்கில் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. நாளை இவர்கள் அப்படியே சசிகலாவுக்கு ஆதரவாக பேசுவார்கள். ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தியபோது அவரை மீடியா முன் வறுத்தெடுத்தவர்கள் பின்னர் மாற்றிப்பேசினர். சசிகலா விவகாரத்திலும் அதுதான் நடைபெறும் என்கிறார்கள். ஆனால் கே.பி.முனுசாமி மட்டுமே கறாராக சசிகலா எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறார்.

ஜெயலலிதா இருந்தபோதே சசிகலாவுக்கு எதிராக பேசியவர் கே.பி.முனுசாமி. அதனாலே பின்னர் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது தாமாக முன்வந்து அவருக்கு ஆதரவு கொடுத்தார். காட்சிகள் மாறிய பின்னர் ஓபிஎஸ்ஸை விட எடப்பாடி பழனிசாமி சசிகலா எதிர்ப்பில் உறுதியாக இருப்பதால் அவர் பக்கம் நிற்கிறார். இதனால் இனிவரும் நாள்களில் கே.பி.முனுசாமிக்கு முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்களின் ஆதரவு தொடருமா அல்லது தனித்துவிடப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-பாரூக்.

Comments