திருப்பரங்குன்றம் கோயிலில் மீண்டும் தங்கத்தேர்!

 

-MMH

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஓராண்டுக்குப் பின் தங்கத்தேர் இழுக்கும் வைபவம் வியாழக்கிழமை நடைபெற்றது. கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் 25 ஆம் தேதி கோயிலில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் நேற்றிக்கடன் செலுத்தும் விதமாக கடந்த ஆண்டு பிப்.24 ஆம் தேதி தங்கத்தேர் இழுத்த நிலையில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக அது பயன்படுத்தப்படாமல் இருந்தது. 


இந்நிலையில் கரோனா பொதுமுடக்கத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து தளர்வுகளை ஏற்படுத்திய நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் தங்கத்தேர் இழுக்க அனுமதியளித்தது. அதனடிப்படியில் கடந்த திங்கள்கிழமை சுவாமி இல்லாமல் தங்கத்தேர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஓராண்டுக்குப்பின் தை அமாவைசையை முன்னிட்டு கோயில் பணியாளர்கள் சார்பில் வியாழக்கிழமை தங்கத்தேர் இழுக்கும் வைபவம் நடைபெற்றது.


இதில் கோயில் கண்காணிப்பாளர் அங்கையர்கன்னி, பொறியாளர் சிவமுருகானந்தம் உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று, தங்கத்தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர். இனிவரும் நாள்களில் (விழாக்காலங்கள் தவிர்த்து) பக்தர்கள் தங்களது நேற்றிக்கடனை செலுத்தும் விதத்தில் தொடர்ந்து தங்கத்தேர் இழுத்து கொள்ளலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்தது.

-ராயல் ஹமீது.

Comments