முதல்வர் கனவு காணும் மூவர்? எடப்பாடி டென்ஷன்!

 

-MMH

     திமுகவின் மேல்மட்டத்திலும் சசிகலா ஆதரவு மனநிலை அதிகரித்து வருவதாக அக்கட்சி வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் பிப்ரவரி 25ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலைச் சந்திப்பது பற்றியும், கூட்டணி முடிவுகள் ஆகியவை குறித்தும் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. சசிகலாவுக்கு முக்கிய பதவி கொடுப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பின்னர்தான்!

சென்னை வந்த சசிகலாவை அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே வருவார்கள் என அதிமுக, அமமுக இரு வட்டாரங்களிலும் கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவித்தபின் இப்போதுள்ள அரசு காபந்து அரசாக மாறிவிடும். அதுவரை ‘அப்பாயின்ட்மென்ட், டிரான்ஸ்ஃபர்’ வேலைகளில் அதிமுகவினர் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றனர் என கூறுகிறார்கள்.

எடப்பாடிக்கு கிடைத்த தகவல்!

அதே போல் அதிமுகவில் விருப்ப மனுக்கள் விநியோகிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகிவிட்டது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத பலரும், அதிருப்தியில் உள்ளோரும் அமமுகவை நோக்கி நகர்ந்து வருவார்கள் என்று கூறப்படுகிறது. இதற்கெல்லாம் வாய்ப்புள்ளது என்பது எடப்பாடி பழனிசாமிக்கும் தெரியும். ஆனால் முக்கிய அமைச்சர்கள் சிலரே சசிகலா ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதாக எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் போயுள்ளது.

மௌனம் காக்கும் தர்மயுத்த நாயகன்!

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட போதும் எந்த இடத்திலும் ஓ.பன்னீர் செல்வம் அவரை முன்னிறுத்தி வாக்குக் கேட்கவில்லை. சசிகலாவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம் ஆகியோர் தொடர்ந்து பேசிவரும் நிலையில் தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ் மௌனம் சாதித்து வருகிறார். இதனால் ஓபிஎஸ் சசிகலா ஆதரவு மனநிலையில் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எடப்பாடி தரப்புக்கு இருப்பதாக கூறுகிறார்கள்.

விஜயபாஸ்கருக்கு இப்படியொரு யோசனையா?

அதேபோல் அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்தும் ஒரு தகவல் வந்துள்ளது. சசிகலா ஆதரவு மனநிலையில் அவர் இருப்பதாகவும் அவரை கட்சிக்குள் கொண்டு வந்து முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்கச் செய்யலாம், குறைந்தபட்சம் துணை முதல்வர் பதவியையாவது கேட்டுப்பெறலாம் என்ற திட்டத்தில் அவர் இருப்பதாக கூறுகிறார்கள். அவைத்தலைவர் மதுசூதனனும் சசிகலாவை சேர்த்துக்கொள்ளலாமே என்ற நிலையில்தான் உள்ளாராம்.

விளம்பர நாயகன் எஸ்.பி.வேலுமணி!

எடப்பாடி பழனிசாமியை டென்ஷனாக்கிய மற்றொரு முக்கிய விஷயம் கொங்கு மண்டலத்திலேயே நடைபெற்றுள்ளது. எடப்பாடியின் வலக்கரம் எனக் கூறப்படும் எஸ்.பி.வேலுமணியும் சசிகலா ஆதரவு மனநிலையில் இருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது. ஓபிஎஸ் ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமிக்கு நிகராக நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்து சத்தமில்லாமல் குடைச்சல் கொடுத்துவரும் நிலையில் எஸ்.பி.வேலுமணியும் தன்னை முன்னிறுத்தி அதிக விளம்பரம் கொடுத்து வருகிறார்.

வேலுமணியை கடிந்துகொண்ட எடப்பாடி?

50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உள்ளாட்சியில் சாதனை படைத்ததாக விளம்பரம் கொடுக்கும் எஸ்.பி.வேலுமணியை எடப்பாடி பழனிசாமி கடிந்துகொண்டதாக கூறப்படுகிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா செய்யாத சாதனைகளை செய்துவிட்டீர்களா என கேள்விகளால் துளைத்துவிட்டதாக சொல்கிறார்கள். சசிகலாவை உள்ளே கொண்டு வந்து முதல்வர் வேட்பாளராகவோ, துணை முதல்வர் வேட்பாளராகவோ தன்னை முன்னிறுத்த முயற்சித்து வருவதாக ரகசிய தகவல் வெளிவந்துள்ளது. இதனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் அதிரடிக்கு பஞ்சமிருக்காது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

நிருபர்கள் குழு: சென்னை,திருச்சி,சிவகங்கை,கோவை. 

-பாரூக்.

Comments