சதுரங்க வேட்டை படத்தை போல இரிடியம் விற்பனை செய்வதாக ரூ.26 கோடி மோசடி! நடிகை ஜெயசித்ரா மகன் கைது!
அரியவகை இரிடியத்தை, வெளிநாட்டு நிறுவனத்துக்கு, 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்றுத் தருவது போல நடித்து, தொழில் அதிபரிடம், 26.20 கோடி ரூபாய் சுருட்டிய, நடிகை ஜெயசித்ராவின் மகனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவை சேர்ந்தவர் ஜெயசித்ரா, (60). நடிகையான இவர், குறத்தி மகன், அரங்கேற்றம் உட்பட ஏராள மான படங்களில் நடித்து உள்ளார். இவரது கணவர் கணேஷ், இறந்துவிட்டார். இவர்களது ஒரே மகன் அம்ரீஷ்(33) இசையமைப்பாளர். தன் தாய் ஜெயசித்ரா இயக்கிய, 'நானே என்னுள் இல்லை' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.
அம்ரீஷ்க்கும், சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த, நெடுமாறன்(68) என்பவருக்கும், 2013ல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தொழில் அதிபரான நெடுமாறன், படப்பிடிப்பு தளம் மற்றும் பங்களா கட்டி வாடகைக்கு விட்டு வருகிறார். இவரிடம், அம்ரீஷ் மற்றும் இவரது கூட்டாளிகள், 'தங்களிடம் அரியவகை 'இரிடியம்' உள்ளது. இதை மலேசியாவில் உள்ள நிறுவனம், 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கத் தயாராக உள்ளது. 'எங்களுக்கு, 26.20 கோடி ரூபாய் மட்டும் கொடுத்தால் போதும். மீதி தொகை முழுதையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்' என நம்ப வைத்துள்ளனர்.
மேலும், தங்களிடம் இருப்பது அரியவகை இரிடியம் தான் என்பதை, கனடா ஆய்வகம் உறுதி செய்து சான்று அளித்து இருப்பதாக, ஆவணத்தை காட்டியுள்ளனர். நெடுமாறனை மலேசியாவுக்கு அழைத்துச் சென்று, தங்கள் கூட்டாளிகள் வாயிலாக, நட்சத்திர ஓட்டலில் அந்நாட்டு நிறுவன பிரதிநிதிகள், அரியவகை இரிடியத்தை, 2.50 லட்சம் கோடி ரூபாய்க்கு வாங்கியது போல ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
இதை நம்பிய நெடுமாறன், அம்ரீஷ் மற்றும் இவரது கூட்டாளிகளிடம், 26.20 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். ஆனால், மலேசிய நிறுவனத்திடம் இருந்து பணம் வரவில்லை. இதனால் அதிர்ச்சிஅடைந்த நெடுமாறன், நடிகையின் மகனை நம்பி கோடிக்கணக்கில் பணத்தை பறிகொடுத்தது பற்றி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, அம்ரீஷை பிடித்து விசாரித்தனர். தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து, 26.20 கோடி ரூபாயை மோசடி செய்ததை அம்ரீஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அம்ரீஷை கைது செய்தனர். கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
-பாரூக்.
Comments