மழையில் நனையாமலிருக்க மரத்தின் அடியில் ஒதுங்கிய 4 பேர்! மின்னல் தாக்கிய பரிதாபம்! பதற வைக்கும் வீடியோ!
ஹரியானா மாநிலம் குர்கானில் மின்னல் தாக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹரியானா மாநிலம் குர்கானில் சம்பவத்தன்று காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது.
செக்டர் 82 பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில், மழையில் நனையாமல் இருக்க 4 பேர் அருகில் இருந்த மரத்தின் அடியில் ஒதுங்கியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக அந்த மரத்தை மின்னல் தாக்கியுள்ளது. தீப்பிழம்பை தூக்கி எரிந்தது போன்று மின்னலானது தாக்க, நொடிப்பொழுதில் மரத்தின் அடியில் நின்றிருந்த மூவரும் ஒரேநேரத்தில் சரிந்து விழ, நான்காம் நபர் மட்டும் இரு நொடிகள் கழித்து சரிந்து விழுகிறார்.
இதையடுத்து அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஒருவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எஞ்சிய மூன்று பேரும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
-பாரூக்.
Comments