திண்டுக்கல் அருகே கோர விபத்து! 4 பேர் பலியான துயரம்!

-MMH

       திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே, அரசுப் பேருந்தும் தனியார் நூற்பாலை நிறுவன வேனும் நேருக்கு நேர் மோதியதில் தொழிலாளிகள் 4 பேர் பலியாகினர். வத்தலக்குண்டிலிருந்து நூற்பாலைத் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று இன்று காலை சாலைபுதூர் நோக்கி சென்றது. திண்டுக்கல் சாலையில் சேவுகம்பட்டி பிரிவு அருகே வேன் சென்றபோது,  அந்தவழியாக திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

இரு வாகனங்களும் அதீத வேகத்தில் வந்ததால், நேருக்கு நேர் மோதியதில் வேனின் முன்பகுதி சுக்குநூறாக நொறுங்கியது. மேலும் பேருந்தின் முன்பக்கத்தின் ஒரு பகுதியும் சிதைந்தது. இதில் வேன் டிரைவர் உட்பட நூற்பாலை தொழிலாளிகள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், இடிபாடுகளில் சிக்கித் தவித்தவர்களை மீட்டு, வத்தலக்குண்டில் உள்ள தனியார் மற்றும் தேனி அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீசார் வழக்கு பதிந்து, விபத்துக்கு அதிவேகமாக வாகனம் ஓட்டி வந்தது காரணமா அல்லது கவனக்குறைவா என விசாரணை நடத்தி வருகின்றனர். காலை நேரம் நடந்த இந்த பயங்கரச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- ராயல் ஹமீது.

Comments