சிங்கம்புணரி பகுதியில் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் பிரச்சாரம்! பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு!

 

-MMH

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக தொடர்ச்சியாக நான்காவது முறையாக போட்டியிடும் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ, நேற்று சிங்கம்புணரி சுற்றுவட்டாரத்தில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அரசினம்பட்டி, கோட்டைவேங்கைப்பட்டி, சூரம்பட்டி, தலை வணங்காம்பட்டி, குமரிப்பட்டி, கண்ணமங்கலம்பட்டி, பருகுப்பட்டி, அணைக்கரைப்பட்டி ஊராட்சி பகுதிகள், சிங்கம்புணரி அண்ணாநகர் மற்றும் கே.புதூர் உள்ளிட்ட 38 இடங்களில் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

பிரசாரத்தில் அவர் பேசியதாவது, 'மத்தியில் பாஜக அரசாலும், மாநிலத்தில் ஆளும் அதிமுக அரசாலும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசிகளும் விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதற்குக் காரணம் ஆட்சியாளர்களின் ஈவு, இரக்கமற்ற நடவடிக்கைகள்தான். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி என்பது ஒரு செயல்படாத ஆட்சியாக இருந்துள்ளது. அப்படி செயல்படாத காரணத்தால் எந்தவிதமான வளர்ச்சியும் பெறாத, வேலைவாய்பை பெருக்கி தராத, சட்ட ஒழுங்கை முறையாக பராமரிக்காத, விலைவாசிகளை கட்டுப்படுத்த முடியாத மாநிலமாக இன்றைக்கு தமிழகம் இருந்து வருகிறது.

இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் கொலை, கொள்ளை கற்பழிப்பு, வழிப்பறி என்பது அன்றாடம் அங்கீகரிக்கப்பட்டவை போன்று நடந்து வருகிறது. தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்டு அவர்கள் சொல்வதை மறுத்துக் கூறாமல் அப்படியே செய்வதுதான் இந்த எடப்பாடியின் அதிமுக ஆட்சி. மேலும் தமிழகத்தை ஊழல் நிறைந்த மாநிலமாக மாற்றியதுதான் அதிமுகவின் சாதனையாக உள்ளது. தொடர்ந்து 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த போது, மக்களின் தேவைகைள உணர்ந்து செய்யாமல், மக்களுக்கு எதிரான துரோகம் விளைவிக்கும் பல மத்திய அரசின் திட்டங்களுக்கு ஆதரவளித்துவிட்டு, இன்று மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் போல் தங்களை காட்டிக் கொள்கிறார்கள் அதிமுகவினர்.

மேலும் ஆட்சி அதிகாரத்தில் அமரச் செய்த மக்களை மத்திய அரசும், மாநில அரசும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாறி, மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டுமானால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதிய ஆட்சி மலர வேண்டும். அதற்கு நீங்கள் உதயசூரியனுக்கு வாக்ளித்து என்னை வெற்றி பெற செய்யவேண்டும்' என்றார்.

கிராமங்கள்தோறும் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏவுக்கு பொதுமக்கள் அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

-அப்துல்சலாம்.

Comments