முகேஷ் அம்பானி வீடு அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் கிடந்த வெடிகுண்டு விவகாரம் -மும்பை போலீஸ் கமிஷனர் மாற்றம் !!
பிரபல தொழில் அதிபரும் ரிலையன்ஸ் குழும தலைவருமான முகேஷ் அம்பானியின் , மும்பை வீட்டு அருகே கடந்த மாதம் 25-ந் தேதி சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த காரில் சோதனை நடத்தியதில் 20 ஜெலட்டின் குச்சிகள் சிக்கின. மேலும் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவிக்கும் மிரட்டல் விடுக்கும் கடிதமும் சிக்கியது.இந்த வழக்கினை சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றியது மராட்டிய அரசு. தற்பொழுது இவ்விசாரணை பல்வேறு மர்ம முடிச்சுகள் அவிழ்ந்துக்கொண்டிருக்கின்றது, அதாவது வெடிகுண்டுடன் சிக்கிய காரின் உரிமையாளர் என கருதப்படும் தானேயை சேர்ந்த ஆட்டோ உதிரிபாக வினயோகஸ்தர் ஹிரன் மன்சுக்(வயது48) கடந்த 5-ந் தேதி கொலையுண்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டது சரச்சை கிளப்பியது.
பின்னர் இவ்வழக்கை தனது விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் எடுத்துக்கொண்ட தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.), கடந்த 13-ந் தேதி மும்பை குற்ற புலனாய்வு பிரிவில் உதவி இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சச்சின் வாசே என்ற அதிகாரியை அதிரடியாக கைது செய்தது. அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தியதில் வழக்கு விசாரணைக்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கின.
மேலும் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கைதான சச்சின் வாசேக்கு சொந்தமான கார் ஒன்றையும் இவ்வதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அக்காரில் இருந்து ரூ.5 லட்சம் ரொக்கம், பணம் எண்ணும் எந்திரம் மற்றும் சில துணிகளையும் கைப்பற்றினர். மேலும் அம்பானி வீட்டு அருகே நின்ற வெடிகுண்டு கார், அங்கு செல்லும் போது அதன் பின்னால் சச்சின் வாசேயின் கார் சென்று உள்ளது. மேலும் இந்த காரை சச்சின் வாசேயே ஓட்டியுள்ளார். இதுதவிர வெடிகுண்டுடன் காரை நிறுத்திய டிரைவரை இவர் தனது காரில் ஏற்றிக்கொண்ட அதிர்ச்சி தகவலும் விசாரணையில் வெளிச்சமாகி உள்ளது.
ஆனால் என்.ஐ.ஏ. வழக்கை கையில் எடுக்கும் வரை, மும்பை போலீசார் வழக்கை திசை திருப்பி வந்ததாக கூறப்படுகிறது. வழக்கை தவறாக கையாண்ட விதம் தொடர்பாக மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது அரசு அதிருப்தி அடைந்தது. இது தொடர்பாக முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவை, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் சந்தித்து பேசினார். இதனால் இந்த வழக்கு அரசியல் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங்கை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேரில் அழைத்து விசாரித்தார். இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக நேற்று மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் ஊர்க்காவல் படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார். (மாநில போலீஸாரை பொருத்தவரையில் இது தண்டனைக்குரிய பதவியாக கருதப்படுகிறது)
இதற்கிடையே இவ்விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், விரைவில் முழு சதியும் வெளிவரும் என்றும் என்.ஐ.ஏ. வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. கைதான போலீஸ் அதிகாரி சிவசேனா தொண்டர் என்ற தகவலும் வெளியானது. ஆனால் சில ஆண்டுகளாக அவர் தனது உறுப்பினர் பதவியை புதுப்பிக்கவில்லை என்பதால், அவர் தங்களது கட்சி தொண்டர் அல்ல எனவும் சிவசேனா கூறி உள்ளது.
மொத்தத்தில் இவ்வழக்கு விசாரணையை தவறாக வழிநடத்திய புகாரில் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் அதிரடியாக மாற்றப்பட்டதும் தற்பொழுது அரசியல் தளத்திலும் - காவல்துறையினர் மத்தியிலும் , ஊடகங்கள் மத்தியிலும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
-நவாஸ்.
Comments