சீரழிகிறதா சமூகம்? சீருடையில் இருந்த பள்ளி மாணவிக்கு தாலிகட்டிய இளைஞர்!
சீருடையில் இருந்த பள்ளி மாணவிக்கு இளைஞர் ஒருவர் தாலி கட்டிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த இளைஞரைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயில் ஒன்றின் பின்புறத்தில் இரண்டு சுவர்களுக்கு நடுவே சிவப்பு நிற ஸ்வெட்டர் அணிந்த பள்ளி மாணவி ஒருவர் பதற்றத்தடன் நின்றுகொண்டிருக்க, ரோஸ் நிற சட்டை அணிந்த இளைஞர் ஒருவர், மஞ்சள் கிழங்கு கட்டப்பட்ட தாலிக் கயிற்றை அந்தப் பள்ளி மாணவியின் கழுத்தில் கட்டுகிறார்.
பதற்றத்துடனேயே அந்த மாணவியும் மஞ்சள் கயிற்றை மறைக்கிறார். அருகிலுள்ள இளைஞர்கள் சிரித்தபடியே இதை வீடியோ எடுக்கின்றனர். இந்த காட்சிகளைக் கொண்ட வீடியோ, சமூக வலைத்தளங்களில் பரவி பலரையும் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. இந்த அதிர்ச்சி வீடியோவைக் கண்ட நீலகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு, இது நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உறுதி செய்தனர்.
இந்த வீடியோ குறித்து குன்னூர் மகளிர் காவலர்கள் கூறியதாவது, `அந்த இளைஞரின் பெயர் கிறிஸ்டோபர். இவர் குன்னூர் அருகிலுள்ள சட்டன் பகுதியைச் சேர்ந்தவர். இந்த வீடியோ கடந்த பிப்ரவரி மாதம் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அந்ந இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
இந்த விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர்கள், `பள்ளி மாணவி ஒருவருக்கு இளைஞர் தாலிகட்டி, அதை வீடியோவாகவும் வெளியிட்டிருப்பது மோசமான செயல். குறிப்பிட்ட அந்த நபருக்கு உரிய தண்டனை அளித்தால் மட்டுமே இது போன்ற சம்பவங்களைத் தடுக்க முடியும். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளிடம் முறையான விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை' என்றனர்.
-பாரூக்.
Comments