கலை நிகழ்ச்சியா..? ஆபாச நிகழ்ச்சியா..? கிராமிய கலைஞர்கள் புகார்!!

     -MMH

ஓமலூர்: கடந்த சில நாட்களுக்கு முன்பு ஓமலூர் பால குட்டப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் இடம்பெற்ற பெரும்பாலான திரைப்படப் பாடல்களுக்கு நடனக்கலைஞர்கள் ஆபாசமாக நடனம் ஆடியது பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும் வகையில் இருந்தது.

இது குறித்து தமிழ் மாநில திரைப்பட கிராமிய நடன கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நல சங்கத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட ஓமலூர் காவல்துறை உயர் அதிகாரியிடம் நேரடியாக ஆதாரத்துடன் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

இதனால் பொறுமை இழந்த கிராமிய நடன கலைஞர்கள், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். தொடர்ந்து காவல்துறை பாராமுகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் கொடுத்தனர்.

இதுபோன்ற சில கலைஞர்களால் பாரம்பரியமாக மேடைகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வரும் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஆபாச நடன நிகழ்ச்சிகளை அனுமதிக்கக் கூடாது என அரசு உத்தரவு இருந்தும் காவல்துறை அதை அனுமதிப்பது வேடிக்கையாக விஷயமாக உள்ளது என்றும், மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு ஒருபோதும் அனுமதியளிக்கக் கூடாது எனவும் கேட்டுக்கொண்டனர். மேலும், நிகழ்ச்சி குறித்த முழுமையான வீடியோவையும் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

-ராயல் ஹமீது.

Comments