ஐ.பி.எல். கிரிக்கெட்: 'தேவ்தத் படிக்கல்' அசத்தல் சதம்! - பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!!!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் பெங்களூரு அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 16-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பட்லர், வோரா ஆகியோர் களமிறங்கினர்.
ஆனால் இருவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். பட்லர் 8 ரன்களிலும், வோரா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சன் 21 ரன்கள் இருக்கும்போது வாஷிங்டன் சுந்தர் வீசிய பந்தை அடித்து மேக்ஸ்வெலிடம் கேட்சை கொடுத்தார். இதன் பின்னர் வந்த துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 32 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்த துபே அரைசதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 46 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
கடைசியில் ஜோடி சேர்ந்த ராகுல் தெவாட்டியா, கிறிஸ் மோரிஸ் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ராகுல் தெவாட்டியா 40 ரன்கள் குவித்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் 177 ரன்கள் குவித்தது.
இதையடுத்து 178 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாட துவங்கிய பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். கோலி சற்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்த, தேவ்தத் படிக்கல் ஆரம்பம் முதலே தனது ரன் வேட்டையை தொடங்கினார்.
ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த படிக்கல், 8வது ஓவரில் அரைசதத்தைக் கடந்தார். அதே நேரம் 13-வது ஓவரில் அரைசதத்தை கடந்த விராட் கோலி, இன்றைய ஆட்டத்தின் மூலம் ஐ.பி.எல். தொடரில் 6000 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
இறுதி ஓவர்களில் வெற்றி பெற மிக குறைவான ரன்களே தேவையாக இருந்த நிலையிலும், படிக்கல் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். 17-வது ஓவரில் ஒரு பவுண்டரியுடன் தேவ்தத் படிக்கல் 100 ரன்களைக் கடந்தார். இறுதியாக 16.3 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பு எதுவும் இன்றி 181 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. விராட் கோலி(72 ரன்கள், 47 பந்துகள், 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) மற்றும் தேவ்தத் படிக்கல்(101 ரன்கள், 52 பந்துகள், 11 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) இருவரும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், தொண்டாமுத்தூர்.
Comments