ஒரே நம்பர், 2 இன்னோவா கார்கள்!! குழப்பத்தின் உச்சத்தில் அதிகாரிகள்!!
கன்னியாகுமரி மாவட்டம் அழகாபுரத்தைச் சேர்ந்தவர் முத்துதுரை. இவர் தூத்துக்குடியைச் சேர்ந்த உமாதேவி என்பவரின் பழைய இன்னோவா காரை (TN 69 AM 4777) பத்து லட்சம் விலை கொடுத்து சமீபத்தில் வாங்கியுள்ளார். பழைய உரிமையாளரின் பெயரில் உள்ள அந்த வாகனத்தை, தனது பெயருக்கு மாற்றுவதற்காக முத்துதுரை, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகதிற்குச் சென்றுள்ளார்.
அப்போதுதான் அந்த அதிர்ச்சிகரமான செய்தி அவருக்குத் தெரியவந்தது. அதாவது, அவர் வாங்கிய வாகனத்தின் அதே எண்ணை, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முத்துகணேஷ் என்பவரது மற்றொரு வாகனத்துக்கு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பெயர் மாற்றம் செய்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
உடனே காரை விற்பனை செய்த உமாதேவியை அழைத்துக் கொண்டு சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தார். முத்துகணேஷையும் வரச் சொல்லியிருந்ததால் அவரும் வந்தார். இரு கார்களிலும் ஒரே நம்பரை பார்த்த அதிகாரிகள் குழப்பமடைந்தனர். மேலும் இரு கார்களின் நிறம், நம்பர், ஆவணங்களை ஆய்வு செய்தபோது இரண்டிற்கும் ஒரே மாதிரியாக இருந்தன. இருவரிடமும் விசாரித்தபோது, 2014-ம் ஆண்டில் தான் இந்த இன்னோவா காரை வாங்கியதாகவும், தற்போது புதிய கார் வாங்க திட்டமிட்டுள்ளதால் இந்த காரை விற்க முடிவு செய்ததாக செய்ததாகவும் உமாதேவி கூறினார்.
மேலும் முத்துகணேஷ் கூறுகையில், மதுரை தரகர் மூலம் தூத்துக்குடி தனியார் கார் விற்பனை நிலையத்தில் தனது காரை 20 தினங்களுக்கு முன்பு வாங்கியதாக தெரிவித்தார். இதனையடுத்து எது போலி, எது உண்மையானது என்பதை விசாரிக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து, சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலர் கூறுகையில், ''புகார் வந்த பின்புதான் ஒரே எண்ணில் இரண்டு கார்கள் இருப்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது. ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்ததால் பெயர்மாற்றம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எப்படியோ ஆவணத்தை அப்படியே டூப்ளிகேட் பிரதி எடுத்துள்ளனர்.
இதனால் எந்த ஆவணம் போலி என்பதை, நிஜமாகவே கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டு ஆவணங்களிலும் காரின் முதல் உரிமையாளர் பெயர் உமாதேவி என்றுதான் இருக்கிறது. ஆனால் புகைப்படம் மட்டும் போலி ஆவணத்தில் இன்னொரு பெண்ணின் போட்டோ உள்ளது. இதை யார் செய்தது என்பது கூடிய விரைவில் தெரியவரும், இப்படி செய்த மோசடி கும்பல் கூடிய சீக்கிரம் சிக்குவார்கள் '' என்று தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பழைய கார் வாங்கி கொடுக்கும் தரகர் ஒருவர் கூறுகையில், '"தமிழகம் முழுவதும் ஒரே நம்பர் பிளேட்டில் ஏராளமான போலி வண்டிகள் ஓடுகின்றன. இதனை மோசடி கும்பல் ஒன்று தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. அந்தக் கும்பல், கார் பைனான்ஸ் நிறுவனங்கள் மற்றும் வேறு ஏதாவதொரு வகையில் காரின் அசல் ஆவணங்களைப் பெற்று, அப்படியே நகலெடுத்து விடுகின்றன. பிறகு அந்த ஆவணங்கள் அடிப்படையில் ஒரே நம்பர் பிளேட்டில் திருட்டு வாகனங்களை விற்று விடுகிறது.
பெரும்பாலும் வாங்கியவர்கள் பழைய காரை பெயர் மாற்றம் செய்வது கிடையாது. இதனால் உண்மை அப்படியே அழிந்து போகிறது. நெல்லை, தூத்துக்குடி, சென்னை, கேரளா போன்ற இடங்களில் இதுபோன்று போலி ஆவணங்கள் மூலம் கார்களை விற்பனை செய்யும் கும்பல் செயல்பட்டு வருகிறது. நாம்தான் ஜாக்கிரதையாக கார் வாங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
- பாரூக், சிவகங்கை.
Comments