மொத்த வாக்காளர்கள் 90 பேர்! பதிவான வாக்குகள் 171. பாஜக ஆளும் அசாமில் சம்பவம்!

 

-MMH

அசாம் மாநில வாக்குச்சாவடி ஒன்றில், வாக்காளர்களை விட அதிக வாக்குகள் பதிவான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநிலத்தில் சர்பானந்த சோனோவால் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் இரண்டாம் கட்டத் தேர்தல் கடந்த ஒன்றாம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திமா ஹசோவா மாவட்டம், ஹஃப்லாங் சட்டமன்றத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடந்தது. இந்தத் தொகுதியில் 74%வாக்குகள் பதிவாகியுள்ளன. ஹஃப்லாங் தொகுதிக்கு உட்பட்ட 107(A) கோட்லிர், எல்.பி பள்ளி வாக்குச்சாவடியில் மொத்தம் 90 வாக்காளர்கள்தான் இருக்கின்றனர்.

ஆனால், இரண்டாம் கட்டத் தேர்தலில் அந்த வாக்குச்சாவடியில் இருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 171 பேர் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்த வாக்குச்சாவடியின் ஐந்து தேர்தல் அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்து மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். உடனே சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு மறுதேர்தல் நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பேசிய அதிகாரி ஒருவர், 'சம்பந்தப்பட்ட கிராமத்தின் தலைவர் வாக்காளர் பட்டியலை ஏற்க மறுத்துவிட்டார். அவர் தனியாக ஒரு பட்டியலை வைத்துக் கொண்டு,

அதன் அடிப்படையில் வாக்களிக்க பொதுமக்களை அனுமதித்துள்ளதாக'க் கூறினார். இந்நிலையில் ஊர்த்தலைவரின் பேச்சை தேர்தல் அதிகாரிகள் எப்படி ஏற்றுக் கொண்டனர்?. இது விதிமுறைகளுக்கு புறம்பானது. தேர்தல் நடந்த போது பாதுகாப்பு அதிகாரிகள் பணியில் இருந்தார்களா?  அல்லது இவர்களே அந்த வேலையையும் பார்த்துக் கொண்டனரா என்று கேள்வி எழுந்துள்ளது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.

-பாரூக்.

Comments