நாளைய வரலாறு புலனாய்வு இதழின் எட்டாம் ஆண்டு விழா..!!
நாளைய வரலாறு புலனாய்வு இதழின் எட்டாவது ஆண்டு விழா மற்றும் நிர்வாகிகள் பதவியேற்பு விழா மிக சிறப்பாக நேற்று கோவையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
கோவை ஆலாந்துறை சாலையில் உள்ளது செலிபிரிட்டி ரிசார்ட்ஸ் எனப்படும் தனியார் தங்கும் விடுதி. வனங்களின் நடுவே இயற்கை கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள அந்த விடுதியில் முன்னாள் நீதியரசர் திரு முருகானந்தம் மற்றும் பி.பி.எஸ். நிறுவனங்களின் உரிமையாளர் தொழிலதிபர் திரு சாகுல் ஹமீது அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஆசிரியர் திரு M.முகமது ஹாரூன் , வெளியீட்டாளர் A .முகமது இஸ்மாயில் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். நிர்வாக குழு உறுப்பினர்கள் திருமதி இந்திரா தேவி முருகேசன் திரு ஸ்டார் வெங்கடேசன் ,திரு கணேசன், துணை ஆசிரியர் திரு வெங்கடாஜலபதி , திரு சசிகுமார் ,திரு சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழ்தாய் வாழ்த்துடன் இனிதே ஆரம்பித்த இந்த விழா சிறப்பு விருந்தினர்களின் வார்த்தை ஜாலத்தால் அலங்கரிக்கப்பட்டு, மறைந்த முன்னாள் தலைமை நிருபர் திரு கிரி அவர்களுக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .
இந்திராதேவி முருகேசன் அவர்களின் நாவன்மையால் தமிழ் புலமையால் சிறப்பு பெற்றது. ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் அவர்கள் புதிதாக பதவியேற்றுள்ள நிருபர்களுக்கு அறிவுரையும் இந்த பத்திரிக்கையை மென்மேலும் எவ்வாறு வளர்க்க வேண்டும் என்று வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசும் பொழுது தொழிலதிபர் திரு சாகுல் ஹமீது அவர்கள் பத்திரிகையாளர்கள் எவ்வாறு நேர்மையாக செயல்பட வேண்டும் என்று கூறி அனைவரையும் வாழ்த்தினார்.
முன்னாள் நீதியரசர் திரு முருகானந்தம் இந்த நிகழ்ச்சிக்கு தனது வார்த்தைகளால் மெருகு ஊட்டினார் என்றே கூறலாம் . அவர் தனது உரையில் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகத்துறை எவ்வாறு நேர்மையுடன் செயல்பட வேண்டும் மற்றும் தனிமனித ஒழுக்கத்துடன் செயல்படவேண்டும் என்று இளம் நிருபர்களுக்கு அறிவுரை வழங்கி ஆசிர்வாதத்தை வழங்கினார் .
நிகழ்ச்சியின் இறுதியாக புதிதாக பதவியேற்றுள்ள நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை மற்றும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கலந்து கொண்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் அனைவருக்கும் நிருபர்கள் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டு பொன்னாடை அணிவிக்கப்பட்டது.
இறுதியில் சிவகங்கை மாவட்ட தலைமை நிருபர் திரு பாருக் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இதுபோன்று புத்துணர்வு மற்றும் அறிவுரை வழங்கும் விழா மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் பரவலாக நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக இருந்தது.
நாளைய வரலாறு பத்திரிகைக்காக,
-V.இராஜசேகரன் தஞ்சாவூர்.
Comments