பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க கனிமொழி கோரிக்கை!!

 

-MMH

      தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகுவிடம் கனிமொழி விடுத்த கோரிக்கை காரணமாக, பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கனிமொழி எம்.பி.க்கு நன்றி தெரிவித்துள்ளனர். பாபநாசம் அணையில் இருந்து, தூத்துக்குடி மாவட்டம் மருதூர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் அணைகள் வாயிலாக, நான்கு பிரதான கால்வாய் மூலம் 46 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. ஆண்டுக்கு கார் மற்றும் பிசானம் என இரண்டு பாசனங்கள் நடைபெறுவது வழக்கம்.

முன் கார் பாசனத்திற்காக அணையில் தண்ணீர் இருக்கும் காலங்களில் ஏப்ரல் 1-ம் தேதி அன்று தண்ணீர் திறந்து விடலாம் என்று நிரந்தர அரசாணை இருந்த போதிலும், தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷனிடம் இருந்து தண்ணீர் திறந்து விட அனுமதி பெற‌ வேண்டிய நிலை உள்ளது. இதனால் இதுவரை பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படவில்லை. 

அணையில் போதுமான தண்ணீர் இருந்தும் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலை இருந்ததால் தண்ணீர் திறந்து விட அனுமதி பெற்று தருமாறு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி.யிடம் தாமிரபரணி பாசன விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். அதனையேற்று, தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு மற்றும் பொதுப்பணித்துறை செயலாளர் மணிவாசன் ஆகியோரை தொடர்பு கொண்ட கனிமொழி எம்.பி, பாபநாசம் அணையில் இருந்து முன்கார் பாசனத்திற்காக தண்ணீர்‌ திறந்துவிட வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். மேலும், தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் எடுத்துரைத்தார். இதனையேற்ற அவர்கள் உடனடியாக பாபநாசம் அணையில் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

-சுரேந்தர்.

Comments