சாவிலும் இணை பிரியாத தம்பதி! கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்தார்!

 

-MMH

         திருவேங்கடம் அருகே ஓய்வுபெற்ற ஆசிரியர் இறந்த நிலையில் அவரது மனைவியும் அதிர்ச்சியில் உயிரிழந்தார். சாவிலும் இணை பிரியாத தம்பதியின் பாசத்தை எண்ணி உறவினர்கள் பொதுமக்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள குலசேகரன்கோட்டையை சேர்ந்தவர் சண்முகவேல்(70). இவர் கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஜிஜிபாய் (68). ஆசிரியையான இவரும், குருவிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர்களுக்கு பாலமுருகன், சிவகுமார், சந்திரசேகர் ஆகிய 3 மகன்கள் உள்ளனர். இதில் பாலமுருகன், ஜமீன்தேவர்குளம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் சிவகுமார், ஊரில் விவசாயம் செய்து வருகிறார். சந்திரசேகர், தர்மபுரியில் கல்லூரியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று அதிகாலை சண்முகவேலுக்கு திடீரென நெஞ்சுவலி  ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை திருவேங்கடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர் பரிசோதித்ததில், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல், வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. கணவர் இறந்த தகவல் அறிந்த அவரது மனைவி ஜிஜிபாய், கதறி அழுத நிலையில் துக்கம் தாங்க முடியாமல் அதிர்ச்சியில் அவரும் திடீரென உயிரிழந்தார். ஒரே நேரத்தில் கணவன், மனைவி இறந்ததால் குடும்பத்தினர், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் தம்பதியான சண்முகவேல், ஜிஜிபாய் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் அதிகபாசத்துடனும் விட்டுக் கொடுக்கும் மனோபாவத்துடன் இருந்துள்ளனர்.

வாழ்வில் மட்டுமின்றி சாவிலும் தங்களை யாரும் பிரிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில் கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் பொதுமக்களை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

-பாரூக்.

Comments