ஊரடங்கில் ரயில், விமான நிலையங்கள் வந்து செல்ல வாகனங்களுக்கு அனுமதி!!

  -MMH

ரயில் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களிலிருந்து பயணிகளை ஏற்றிவரவும் இறக்கிவிடவும் ஆட்டோக்கள், வாடகை கார்கள், தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நடைமுறைகள் அனைத்தும் மறுஅறிவிப்பு வரும்வரை தொடரும் என தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே அறிவித்தபடி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும். எனினும், ஊரடங்கு நேரத்தில் அவசர மருத்துவத் தேவைகளுக்காகவும் ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிடும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும்.

மேலும், அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கின்போது ரயில், விமானங்களில் வந்திறங்கிய மற்றும் புறப்பட்டுச் சென்ற பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இதுதொடர்பாக, பத்திரிகைளிலும் ஊடகங்களிலும் விமர்சனங்கள் எழுந்தன. எனவே, இதுபற்றி அரசும் காவல்துறையும் தெளிவாக அறிவித்து, பயணிகளுக்கு உதவ வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தினர்.

-சோலை. ஜெய்க்குமார், Ln. இந்திராதேவி முருகேசன்.

Comments