கொரோனா கூட இதுவுமா..? பொள்ளாச்சி நகராட்சி நடவடிக்கை .!!

     -MMH
     கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதிகளில் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாதிப்பை குறைக்க தடுப்பு நடவடிக்கைள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. 

இதற்கிடையில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  நகராட்சி பகுதியில் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் தொடர்பாக பொதுமக்களிடம் நகராட்சி அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது; "கொரோனாவும், டெங்குவும் வைரஸ் மூலம் பரவுகின்றன. இதில் டெங்கு காய்ச்சல் ஏ.டி.எஸ். எனும் வகையான கொசுவின் மூலம் பரவுகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே சாதாரண காய்ச்சல் வந்தால் கூட பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். 

பொள்ளாச்சி நகரில் டெங்கு காய்ச்சலை தடுக்க சிறப்பு டெங்கு தடுப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன்படி ஒரு குழுவுக்கு 3 பேர் வீதம் 27 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் ஒரு நாளைக்கு 6 வார்டுகள் வீதம் 6 நாட்களில் நகரின் அனைத்து பகுதிக்கும் சென்று காய்ச்சல் பாதித்த நபர்கள் குறித்த விவரத்தை தயார் செய்வார்கள். 

மேலும் கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில் உள்ள பொருட்களை அகற்றியும், தொட்டிகளில் மருந்து ஊற்றும் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் வீடுகள், கடைகளில் டெங்கு காய்ச்சல் குறித்த துண்டு பிரசுரத்தை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்."

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி .

Comments