ஓடும் பேருந்தில் ஓட்டுனர் மாரடைப்பால் மரணம்! பயணிகள் அலறல்!

 

-MMH

        திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலுக்கு ஒரு தனியார் பேருந்து நேற்று காலை 9 மணி அளவில் புறப்பட்டது. விராலிமலை வழியாகச் செல்லும் அந்தப் பேருந்தை, இலுப்பூர் அருகே பூனைக்குத்திபட்டி என்ற கிராமத்தை சேர்ந்த வீரப்பன் மகன் ஆனந்த் (வயது 27) ஓட்டிச்சென்றார். பேருந்தில் 35 பயணிகள் இருந்தனர்.

திருச்சி-மதுரை நான்கு வழிச் சாலையில் 9.30 மணியளவில் பாத்திமாநகரை அடுத்த எரங்குடி பிரிவு ரோடு அருகே தனியார் பேருந்து  சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஓட்டுனர் ஆனந்த் தனக்கு நெஞ்சு வலிப்பதாக நடத்துனரிடம் கூறியவாறு மயங்கி விழுந்தார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, சாலையின் நடுவே உள்ள தடுப்பு கட்டையில் ஏறி சாலையின் மறுபக்கம் சென்று சாலையோர காட்டுப்பகுதியில் இறங்கி வேகமாக சென்றது. அப்போது பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் உயிர் பிழைப்பதற்காக அலறினர். பின்னர் பேருந்து சாலையில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு சென்று அப்பகுதியில் இருந்த கருவேல மரத்தில் மோதி நின்றது. 

சினிமாவை மிஞ்சும் அளவிற்கு நடந்த இந்த விபத்தை அவ்வழியே சென்றவர்கள் நேரில் பார்த்துப் பதறினர். ஓடிச்சென்று பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். பின்னர் தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் ஓட்டுனரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்தில் பயணிகள் அனைவரும் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் அவர்கள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

-அப்துல் சலாம்.

Comments