மேலூரில் இன்ஜினியர் அடித்துக் கொலை! மூவர் கைது!

 

  -MMH

மேலூரை அடுத்த பெருமாள்பட்டியை சேர்ந்தவர் மரைக்காயர். இவரது மகன் அஜீஸ்(27). இவர் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தவர். இவர்களது வீட்டின் அருகே வசிப்பவர் சச்சிதானந்தம்(60). இவர்கள் இரு குடும்பத்துக்குமிடையே இடப்பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக அவர்களிடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. 

இந்தநிலையில், நேற்று மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறின் போது அஜீஸை, சச்சிதானந்தம் தரப்பினர் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

உடனடியாக, தாக்குதல் சம்பந்தமாக மேலூர் காவல் நிலையத்தில் புகாரளித்துவிட்டு, சிகிச்சைக்காக மேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு, அஜீஸை அழைத்துச் சென்றனர். அதன்பின்பு மேல்சிகிச்சைக்காக அங்கிருந்து மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். ஆனால், வழியிலேயே அஜீஸ் இறந்து விட்டார்.

இதுகுறித்து சச்சிதானந்தம், அவரது மகன் ராமு(27) மற்றும் ராஜா உள்பட பலர் மீது மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து துவக்க நிலை விசாரணை நடத்தினர்.

பின்பு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு புலன் விசாரணை செய்ததில் சச்சிதானந்தம், அழகர் மற்றும் இளையராஜா (எ) பாரதிராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- பாரூக், சிவகங்கை.

Comments