பொள்ளாச்சி இரயில் நிலையத்தில் மின் மயமாக்க பணிகள் தீவிரம்!!

  -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் மின் மயமாக்க கம்பங்கள் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக போத்தனூர் மற்றும் பாலக்காடு இடையேயான மீட்டர் கேஜ் ரெயில் பாதை, அகலரெயில் பாதையாக மாற்றப்பட்டது. 

இதற்கிடையில் போத்தனூர்-பொள்ளாச்சி ரெயில்பாதையை மின் மயமாக்க ரூ.37 கோடியே 36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதேபோன்று திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரையிலான ரெயில் பாதைக்கு ரூ.159 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 

இதை தொடர்ந்து பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை மின் கம்பங்கள் அமைக்கும் பணி நிறைவு பெற்று விட்டது. தற்போது மின் கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதுபோன்று பொள்ளாச்சி ரெயில் நிலைய பிளாட்பார பகுதிகளில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

பொள்ளாச்சியில் இருந்து போத்தனூர் வரை 41 கிலோ மீட்டர் தூரத்திற்கு 906 மின் கம்பங்கள் அமைக்க வேண்டும். இதில் பிளாட்பார்ம் பகுதி தவிர மற்ற பகுதிகளில் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து விட்டது. மேலும் பொள்ளாச்சியில் இருந்து செட்டிப்பாளையம் வரை மின் கம்பிகள் அமைக்கும் பணிமுடிந்து விட்டது. 

மேலும் கிணத்துக்கடவு, செட்டிப்பாளையம் ஆகிய இடங்களில் 2 சுவிட்ச் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. பொள்ளாச்சி-கோமங்கலம்புதூரில் வரை மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோமங்கலத்தில் இருந்து பழனி வரை குழி தோண்டி கான்கீரிட் அமைக்கும் பணி முடிந்து உள்ளது. இந்த பணிகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பணிகள் முடிந்ததும் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்வார். அதன்பிறகு ரெயில்களை இயக்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Comments