இருசக்கர வாகனம் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும் - நீதிமன்றம்.!!

     -MMH

     இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவிகளை பொருத்தும்படி உற்பத்தி நிறுவனங்களுக்கு அறுவுறுத்த மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு காஞ்சிபுரம் சாலையில், பெண் பல் மருத்துவர் பயணித்த இருசக்கர வாகனத்தில், அரசு பேருந்து மோதிய விபத்தில பலத்த காயமடைந்த பெண் பல் மருத்துவரின் உடலில் 90 சதவீத ஊனம் ஏற்பட்டது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த மோட்டார் வாகன தீர்ப்பாயம், 18 லட்சத்து 43 ஆயிரத்து 908 ரூபாய் இழப்பீடாக நிர்ணயித்தது.

இதையடுத்து குறைவான தொகை நிர்ணயிக்கப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கில் அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவில், பூரண நலமுடன் இருந்திருந்தால், அவரது வருமானம் உயர்ந்திருக்கும் என்ற அடிப்படையில் இழப்பீட்டை 1 கோடியே 49 லட்சத்து 80 ஆயிரத்து 548 ஆக உயர்த்தி நிர்ணயித்துள்ளனர்.

அந்த தொகையை 2013ஆம் ஆண்டிலிருந்து 7 சதவீத வட்டியுடன், 12 வாரத்தில் விசாரணை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். மேலும், அந்த தீர்ப்பில் விபத்துகளில் உயிரிழப்பு அதிகரிப்பதற்கு அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதுதான் காரணம் என குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், வேகக்கட்டுப்பாட்டை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

எக்ஸ்பிரஸ் சாலைகளில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லலாம் என்று மத்திய அரசு 2018ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 2009 மற்றும் 2019ஆம் ஆண்டுகளின் புள்ளி விவரங்களை ஒப்பிடும்போது, இருசக்கர வாகனங்களை பொறுத்தவரை விபத்துகளில் சிக்கி மரணம் அடைவோரின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதை குறிப்பிட்டு வேதனை தெரிவித்துள்ளனர்.

வாகன ஓட்டிகள் பலியாவதாக தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதனால் இருசக்கர வாகனங்கள் உற்பத்தி செய்யும்போதே வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தியிருக்க வேண்டுமென உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கும் வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதை கட்டாயமாக்க வேண்டுமெனவும், ஓட்டுனர் உரிமம் வழங்கும்போது பொறுப்புடனும், எச்சரிக்கையுடனும் வாகனங்களை இயக்குவது எப்படி என கற்றுக்கொடுக்கவும் மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.பள்ளிப் பாடத்திட்டங்களில் சாலை விதிகளையும் சேர்த்து கற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வேகத்தை குறைப்பது, வேகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்துவது தொடர்பான, இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-Vருக்மாங்கதன், சென்னை.

Comments