அதிகரிக்கும் கொரோனா பரவல்.. இன்று முதல் அமலாகிறது தமிழக அரசின் கட்டுப்பாடுகள்.!!
சென்னை: கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் தமிழக அரசு அறிவித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன. இதன்படி திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல கோயம்பேடு உட்பட தமிழகத்திலுள்ள அனைத்து பெரிய காய்கறிச் சந்தைகளிலும் சில்லரை வியாபார கடைகள் செயல்பட அரசு தடை விதித்துள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையிலான அரசு , தனியார் பேருந்துகள், மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்கலாம் என்றும் நின்று கொண்டு பயணம் செய்ய அனுமதி இல்லை.
காய்கறிக் கடைகள், பல சரக்கு கடைகள், வணிக வளாகங்கள், நகை, ஜவுளிக் கடைகள் , ஷோரூம்கள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 11 மணி வரை செயல்படலாம். உணவகங்கள், தேநீர் கடைகளில் 50 விழுக்காடு இருக்கைகளுடன் இரவு 11 மணி வரை அமர்ந்து உணவருந்தலாம் என தெரிவித்துள்ள தமிழக அரசு உணவகங்களில் இரவு 11 மணி வரை பார்சல் சேவையை தொடரலாம் என கூறியுள்ளது. அனைத்து திரையரங்குகளிலும் 50 சதவிகித இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உள் அரங்குகளில் 200 நபர்களுக்கு மிகாமல் அரசியல், கல்வி, கலாச்சார நிகழ்வுகளை நடத்தலாம். திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமலும், இறுதி ஊர்வலங்களில் 50 பேருக்கு மிகாமலும் மட்டுமே பங்கேற்க வேண்டும். பார்வையாளர்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி அளித்துள்ள அரசு அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் இரவு 8 மணி வரை மட்டுமே பொதுமக்களுக்கு அனுமதி என கூறியுள்ளது.
அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளது. வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர இ-பதிவு முறை கட்டாயம் என அரசு கூறியுள்ளது. வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும், ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து இருவர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
-பாலாஜி தங்கமாரியப்பன், சென்னை போரூர்.
Comments