தஞ்சையில் அமல்படுத்தப்பட்டது இரவு நேர ஊரடங்கு !!

     -MMH
     இந்தியாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பரவல் வேகம் எடுத்து வருகிறது. தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது, முக கவசம் அணிவதை கட்டாயமாக்குவது  , பொது இடங்களில் கூட்டம் சேர்வதை தடுப்பது , பண்டிகை விழாக்களை கடும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிப்பது  உள்ளிட்ட நடவடிக்கைகள் ஒருபுறமும், தடுப்பூசி போடும் பணிகள் இன்னொரு புறமும் என அனைத்து களத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் கொரோனா பரவல் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த (இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) அரசு முடிவு எடுத்தது. இதற்கான வழிகாட்டு நடைமுறைகளையும் அரசு வெளியிட்டது. அதன்படி தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு நேற்று அமல்படுத்தப்பட்டது. தஞ்சை மாவட்டத்திலும்  இரவு நேர ஊரடங்கு நேற்று அமலுக்கு வந்தது. 

இரவு நேர ஊரடங்கையொட்டி தஞ்சை மாநகரில் உள்ள காந்திஜி சாலை, கீழவாசல், தெற்கு அலங்கம், தெற்கு வீதி, நாஞ்சிக்கோட்டை சாலை, மருத்துவக்கல்லூரி சாலை, வல்லம் நம்பர்-1 சாலை,புதிய  பேருந்து நிலைய சாலை உள்பட முக்கிய சாலைகள்  தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டன. 

இரவு 10 மணிக்கு பிறகு வாகனங்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின. வாகன இரைச்சல் இன்றி, மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் ஆள் அரவமின்றி மாறின. சாலைகளில் திரிந்த வாலிபர்கள் சிலர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். சிலர் தங்கள் அடையாள அட்டையை காட்டிவிட்டு இரவு பணிகளுக்கு புறப்பட்டனர். மருந்தகங்களுக்கு செல்வோர் உள்பட அவசர தேவைகளுக்காக செல்வோரை விசாரித்த பின்னரே போலீசார் அனுமதித்தனர்.

இரவு நேர ஊரடங்கையொட்டி நேற்று இரவு 9 மணிக்கே வியாபாரிகள் கடைகளை அடைக்க தொடங்கினர். இரவு 10 மணிக்குள் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட்டன. ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் பங்க்குகள், மருந்தகங்கள் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டன. இப்படி அத்தியாவசிய பணிகள் தவிர இதர அனைத்து கடைகளும், நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன. 

இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கக்கூடிய பெரியகோவில் சாலை, மேம்பாலம், மருத்துவக்கல்லூரி சாலை, நாகை சாலை உள்பட அனைத்து சாலைகளும் வாகன இயக்கம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. தஞ்சை தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் பஸ்கள் இயக்கப்டாததால் வெறிச்சோடி காணப்பட்டது. 

புதிய பேருந்து  நிலையத்தில் இரவு 8 மணிக்கே மக்கள் பதட்டத்துடன் அங்கும் இங்கும் செல்வதை காண முடிந்தது.  நேற்று இரவு 9.30 மணிக்கு கும்பகோணம், பட்டுக்கோட்டை, திருச்சிக்கு கடைசி பஸ்கள் இயக்கப்பட்டன. அதன்பிறகு பஸ்கள் இயக்கப்படாததால் எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கக்கூடிய புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.  இதனால் இரவு 10 மணிக்கே நள்ளிரவு நேர அமைதியை காண முடிந்தது.

இரவு நேர ஊரடங்கு மட்டும் புதிய கட்டுப்பாடுகள் பலனைத் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

நாளைய வரலாறு பத்திரிக்கைக்காக,

-இராஜசேகரன், தஞ்சாவூர்.

Comments