வழுவூர் கிளாசிக்கல் நாட்டிய பயிற்சி மையத்தின் மாணவியின் அரங்கேற்றத்தை கலைமாமணி அனிதா ரத்னம் துவக்கி வைத்தார்!!

     -MMH
     கோவையை சேர்ந்த வழுவூர் கிளாசிக்கல் நாட்டிய பயிற்சி மையத்தின்  மாணவி சஹானா ஸ்ரீ யின் நாட்டிய அரங்கேற்றத்தை பிரபல நாட்டிய கலைஞர் கலைமாமணி அனிதா ரத்னம் துவக்கி வைத்தார்.

பாரம்பரியமாக பரதநாட்டிய கலையை பல்வேறு தலைமுறைகளாக பயிற்சி அளித்து வரும் வழுவூர் கிளாசிக்கல் பரதநாட்டிய கலை மையத்தின் மாணவி சஹானா ஸ்ரீ.லாவண்யா மற்றும் விஷ்ணு பிரகாஷ் ஆகியோரின் மகளான இவர், பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறு வயது முதலே பரதநாட்டியத்தில் உள்ள ஆர்வத்தால் வழூவூர் கிளாசிக்கல்  நாட்டிய பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் இவரது பரதநாட்டிய அரங்கேற்றம் கோவை அவினாசி சாலையில் உள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் அரங்கில் நடைபெற்றது. நாட்டிய பயிற்சி மையத்தின் இயக்குனரும், குருவுமான வழுவூர் பழனியப்பன் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளராக பிரபல நாட்டிய கலைஞர் கலைமாமணி அனிதா ரத்னம் கலந்து கொண்டு பரதநாட்டிய அரங்கேற்றத்தை துவக்கி வைத்தார். அரங்கேற்றத்தில் மாணவி சஹானா , புஷ்பாஞ்சலி, ஐங்கரன், ஜத்தீஸ்வரம், மலை மீது போன்ற பதினான்கு விதமான நாட்டிய கலைகளை ஆடிய படி அரங்கேற்றம் செய்தார்.

சமுக இடைவெளியுடன் நாட்டிய ஆர்வலர்கள் இதனை கண்டு ரசித்தனர். முன்னதாக மாணவியின் குருவான வழுவூர் பழனியப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பல தலைமுறைகளாக நடன கலைகளை கற்று தருவதாகவும், இந்த பரதநாட்டிய கலையை இளம் தலைமுறையினர் அடுத்த தலைமுறையினருக்கும் கற்று கொடுத்து இந்த கலையை அழியாமல் பாதுகாக்க வேண்டும்" என தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments