வீடு, வீடாக களப்பணியாளர்கள் ஆய்வு - 4½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை.... சென்னை மாநகராட்சி தகவல்!

 

-MMH

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னையில் உள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை நாள்தோறும் அணுகி சளி, காய்ச்சல் மற்றும் இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா? என கணக்கெடுப்பு செய்யவும், அறிகுறி உள்ள நபர்களை காய்ச்சல் முகாம்களுக்கு செல்ல அறிவுறுத்தவும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரம் போன்ற பணிகளை மேற்கொள்ளவும் 11 ஆயிரத்து 963 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் மூலம் இதுவரை 5 லட்சத்து 8 ஆயிரத்து 538 நபர்கள் தொற்று அறிகுறி உள்ளவர்களாக கண்டறியப்பட்டு, அவர்களில் 4 லட்சத்து 50 ஆயிரத்து 873 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வீடுகள்தோறும் சென்று களப்பணி மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாநகராட்சியின் சார்பில் உரிய பயிற்சி அளிக்கப்பட்டு, கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற நாள்தோறும் ஆலோசனை வழங்கப்படுகிறது. 

கொரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து டாக்டர்களின் ஆலோசனையின்படி முறையான சிகிச்சைகளை பின்பற்றினால் விரைவில் குணம் அடையலாம். எனவே பொதுமக்கள் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் தங்கள் வீடுகளுக்கு நாள்தோறும் வரும் களப்பணியாளர்களிடம் எவ்வித அச்சமுமின்றி தெரிவித்து தங்களின் உடல் வெப்பநிலை, சுவாசத்தில் ஆக்சிஜன் அளவு போன்ற அடிப்படை பரிசோதனைகளை தங்கள் வீடுகளிலேயே மேற்கொண்டு பயனடைய வேண்டும்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-v.ருக்மாங்கதன் சென்னை.

Comments