பொன்னமராவதி சேர்ந்த இருவர், கார் டயர் வெடித்து பலியான சோகம்!


 -MMH

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள சடையம்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம்(52). இவருடைய மகளுக்கு வருகிற 16ஆம் தேதி திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது.

அதற்கான அழைப்பிதழை கொடுக்க தனது உறவினரான சண்முகம்(28) என்பவருடன் மணப்பாறையில் உள்ள உறவினர்களுக்கு அழைப்பிதழ் கொடுத்து விட்டு மீண்டும் இருவரும் சொந்த ஊருக்கு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனர்.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வளநாடு அருகே மினிக்கியூர் பிரிவு அருகே அவர்களது இருசக்கர வாகனம் வந்த போது, எதிரே மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது.

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற மகாலிங்கம், சண்முகம் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பின்னர், கார் சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அந்தவழியாக வந்தவர்கள் காரில் சிக்கிய 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் மகாலிங்கம், சண்முகம் ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். 

சம்பவம் குறித்து வளநாடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகளின் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க சென்றவர் உறவினருடன் பலியான சம்பவம் சடையம்பட்டி கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- அப்துல்சலாம்.

Comments