நாளை முதல் வீடு தேடி வரும் மளிகை பொருட்கள்.. மக்கள் எப்படி ஆர்டர் செய்வது? முழு விவரம்!

 

-MMH

         வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் தமிழக அரசின் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு தளர்வுகளற்ற முழு ஊரடங்கை ஜூன் 7-ந்தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது ஏற்கனவே தள்ளுவண்டி, வாகனங்கள் மூலம் வீடுகளுக்கு சென்று காய்கனி விற்பனை செய்யப்படும் நிலையில் வீடுகளுக்கு சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இதன்மூலம் அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகை கடை வியாபாரிகள் தங்களது வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் நாளை முதல் தெருத்தெருவாக சென்று மளிகை பொருள்களை விற்பனை செய்யலாம். கடைகளில் இருந்து பொதுமக்களுக்கு மளிகைப் பொருட்களை விநியோகிக்க மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் அனுமதி பெற வேண்டும்.

இதற்காக லைசென்ஸ் பெற்று கடை நடத்துபவர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையான பொருட்கள் குறித்து சீட்டு எழுதி கொடுத்து விட்டு வந்து விட வேண்டும். இல்லாவிடில் செல்போன் மூலமும் மளிகைப் பொருட்கள் குறித்த விவரங்களை கடைகளுக்கு தெரிவிக்கலாம்.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மளிகைப் பொருட்களை விநியோகிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது .பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்ல கடைகளை முழுவதுமாக திறக்க கூடாது. அதற்கு பதிலாக பக்கவாட்டு கதவு அல்லது பின்பக்க வாயிலாக பொருட்களை எடுத்து சென்று வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு விற்பனை செய்யலாம்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் 7,500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாநகராட்சியில் லைசென்ஸ் பெற்று கடை நடத்தி வருகின்றனர். இந்த கடைக்காரர்களுக்கு மட்டும் இருசக்கர வாகனங்களில் சென்று பொருட்களை விற்பனை செய்ய மாநகராட்சியில் இருந்து இன்று டோக்கன்கள் வழங்கப்பட்டன. டோக்கன் வாங்கிய கடைக்காரர்களின் தொலைபேசி எண்கள் www.chennaicorporation.gov.in என்ற மாநகராட்சியின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த கடைக்காரரின் கடை பெயர், அவரது பெயர், செல்போன், வாட்ஸ்-அப் நம்பர்கள் போன்ற முழு விவரங்களும் அந்த இணைய தளத்தில் பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

-செந்தில் முருகன்,சென்னை.

Comments