சேமியா ஃபிரை கேட்டு தனியார் உணவகத்தில் தகராறு செய்த அதிமுக பிரமுகர்! சிசிடிவி காட்சி வெளியீடு!

 

-MMH 

            

                   ஆம்பூரில் சேமியா ஃப்ரை தொடர்பான தகராறில், உணவக உரிமையாளர் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை ரயில் நிலையம் எதிரில் தனியார் உணவகம் நடத்தி வருபவர்கள் முகமது சர்தார் மற்றும் அவரது மகன் முகமது சாலீக். ஊரடங்கு காலம் என்பதால் உணவகத்தில் பார்சல் மட்டுமே வழங்கவேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அங்கு சென்ற 36வது வார்டு அதிமுக கிளை செயலாளர் தயாளன், முன்னாள் காங்கிரஸ் நகரத் தலைவர் பிரபு ஆகியோர் சேமியா ஃபிரை கேட்டுள்ளனர். ஆனால் சேமியா ஃப்ரை மாலையில்தான் கிடைக்கும் என சர்தார் தெரிவித்தார்.

அதற்கு நீங்கள் எதற்கு ஓட்டல் வைத்துள்ளீர்கள் என்று கேட்டு, சர்தாரின் மகன் முகமது சாலீக் மற்றும் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மற்றும் குளிர்பானங்களை எடுத்தும் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் மீது வீசியுள்ளனர்.

இதில், காயமடைந்த முகமது சாலீக் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து விரைந்து வந்த ஆம்பூர் நகர காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில், ஆம்பூர் 36-வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் தயாளன் மற்றும் ஆம்பூர் காங்கிரஸ் முன்னாள் நகர தலைவர் பிரபு ஆகியோர் கடைக்குள் நுழைந்து தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள பிரபு மற்றும் தயாளன் ஆகியோர் மீது ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

-சிவகங்கை நிருபர்கள் குழு.

Comments