சென்னையில் மக்கள் அதிகம் கூடும் 9 மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகள் திறக்க தடை!!

    -MMH

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இன்று முதல் ஆகஸ்டு 9-ந்தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை. சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஆகஸ்டு 9-ந்தேதிவரை கூடுதலாக எவ்வித தளர்வுகளும் இன்றி நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது பக்கத்து மாநிலங்களிலும், மாநிலத்தின் சில பகுதிகளிலும், நோய் தொற்று சற்று அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக நடைமுறைப்படுத்த மாநகராட்சி கமிஷனர் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தமிழக அரசின் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் மார்க்கெட் பகுதிகளில் கொரோனா தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக வணிக நிறுவனங்கள் உடனான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. சென்னை மாநகராட்சி இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் இன்று முதல் ஆகஸ்டு 9-ந்தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை என முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.

அதன்விவரம் வருமாறு:-

• ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் ரெயில் நிலையம் வரை

• புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை

• ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை

• பக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி. போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை

• ராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை

• அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திரு.வி.க.நகர் பூங்கா சந்திப்பு வரை

• ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை இந்த பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் ஆகஸ்டு 9-ந்தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

மேலும், கொத்தவால் சாவடி மார்க்கெட் ஆகஸ்டு 1-ந்தேதி 9-ந்தேதி காலை 6 மணிவரை செயல்பட அனுமதியில்லை என வணிகர் சங்க பிரதிநிதிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை வணிகர்கள் நடைமுறைப்படுத்த மாநகராட்சி மற்றும் காவல் துறையின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பொது இடங்களில் முக கவசம் அணியாத தனிநபர்களுக்கு அபராதம் விதிக்க மாநகராட்சி மற்றும் காவல் துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

-வேல்முருகன் சென்னை.

Comments