சத்துவாச்சாரி காங்கேயநல்லூர் இடையே பாலாற்றில் ரசாயன நச்சுடன் ஓடும் கழிவுநீர் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பெரும் அவதி !!

 

-MMH

                     வேலூர் பாலாற்றில் ஒரு காலத்தில் மழை வெள்ளம் பால்போல ஓடியதாகவும் இதனால் பாலாறு என பெயர் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இந்த பாலாற்றில் இருந்து பெறப்படும் தண்ணீரைக் கொண்டு பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் நீர் பாசன வசதி பெற்றனர். இப்படி பாலாற்றை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். காலப்போக்கில் பாலாற்றில் ஆக்கிரமிப்பு இரவு-பகல் பாராமல் நடக்கும் மணல் கொள்ளை போன்ற சம்பவங்கள் தொடர்ந்தன. 

மணல் கொள்ளையர்களால் சுரண்டப்பட்ட பாலாற்றில் மருத்துவமனைகள் உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஒருபுறம் என்றால், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றொருபுறம். இதனால் தற்போது பாலாறு- பாழாறு ஆக மாறி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் தொடங்கி வேலூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களிலும் பாலாற்றில் நச்சுக் கலந்த கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது.

கழிவு நீரை வெளியேற்றும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்ய வேண்டிய அதிகாரிகளும் இதனை கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதனால் பாலாற்றில் நச்சுகலந்து மிக ஆபத்தான நுரையுடன் கூடிய கழிவுநீர் கலக்கும் நிலையாக உள்ளது. வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவையும் தங்கள் பங்குக்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் அப்படியே வெளியேறிவிடுவதால் பாலாறு இன்று விஷமாக மாறி வருகிறது. இந்நிலையில், சத்துவாச்சாரி- காங்கேயநல்லூரில் இடையே உள்ள பாலாற்று பாலம் வழியாக காட்பாடி மற்றும் சுற்றுப் பகுதிகளுக்கு தினசரி மாணவர்கள்,

வியாபாரிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இப்படி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வரும் பாலாற்றில்,   நச்சு கலந்த நுரையுடன் கருமை நிறத்தில் கழிவுநீர் செல்கிறது.இந்த தரைப்பாலத்தை கடக்கும் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் அந்த வழியாகச் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலாற்றை பாதுகாக்கவேண்டிய மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் இதனை கண்டுகொள்ளாத நிலை நீடிக்கிறது. இதனால் பாலாற்றை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் மாசடைந்து குடிநீரும் மெல்ல மெல்ல குடிக்க லாயக்கற்ற நிலைக்கு மாறி வருகிறது. 

எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக பாலாற்றில் கலக்கும் நச்சு, கலந்தகழிவு நீர் குறித்து ஆய்வு செய்து எங்கிருந்து இந்த  கழிவுநீர் வெளியேறுகிறது என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

-P.ரமேஷ் வேலூர்.

Comments