கோவைக்கு ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு !!
கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் புதிய கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ்மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, சிங்காநல்லூர் சிக்னல் முதல் ஒண்டிப்புதூர் மேம்பாலம் வரை (திருச்சி சாலை) ஹோப் காலேஜ் சிக்னல் (அவினாசி ரோடு), காளப்பட்டி ரோடு (நேரு நகர்), டி.பி.ரோடு, திருவேங்கடசாமி ரோடு, என்.எஸ்.ஆர்.ரோடு, ஆரோக்கிய சாமி ரோடு (கிழக்கு , மேற்கு கடைகள்), சரவணம்பட்டி சந்திப்பு கணபதி பேருந்து நிலைய சந்திப்பு, துடியலூர் சந்திப்பு மார்கெட்டு கடைகள், பீளமேடு ரொட்டி கடை மைதான கடைகள், காந்திமாநகர் சந்திப்பு, ஆவாரம்பாளையம் சந்திப்பு,
பாரதி நகர் (கணபதி), பாப்பநாயக்கன்பாளையம் சந்திப்பு, ராஜ வீதி, பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால் வீதி, என்.எச்.ரோடு, இடையர் வீதி, வைசியாள் வீதி, தாமஸ் வீதி, சுக்கிரவாரபேட்டை வீதி, மரக்கடை வீதி, ரங்கே கவுண்டர் வீதி, காந்திபுரம் 1 முதல் 11ம் எண் வரை உள்ள தெருக்கள் மற்றும் சல்லீவன் வீதி ஆகிய தெருக்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அத்தெருக்களில் இயங்கும் அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் அனைத்தும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது.
மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அனைத்து நகைகடைகள் மற்றும் துணிகடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து பூங்காக்களிலும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்கள் வருகைக்கு தடைவிதிக்கப்படுகிறது.
அனைத்து மால்களும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்க தடைவிதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகள் தவிர அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்கு மூடப்படுவதற்கு ஏதுவாக வாடிக்கையாளர்களை இரவு 8 மணி அளவில் கட்டுப்படுத்த வேண்டும். மேலும் அனைத்து பணியாளர்களும் கண்டிப்பாக ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தப்பட்டிருப்பதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும், அடுமனைகளும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதி மற்றும் 50 சதவிகித கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதனை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவிகித கடைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வார சந்தைகளும் இயங்க தடை விதிக்கப்படுகிறது. பொள்ளாச்சி மாட்டு சந்தை தற்காலிகமாக இயங்க தடைவிதிக்கப்படுகிறது.
கேரள-தமிழ்நாடு மாநில எல்லைகள் அனைத்தும் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேற்படி சோதனைச்சாவடி வழியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி தோத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கோவிட்யின்மை சான்று அல்லது கொரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று உடன் வைத்திருக்க வேண்டும்.
மேற்கண்ட சான்றுகள் இல்லையெனில் திருப்பி அனுப்பப்படுவர். 01.09.2021 முதல் அனைத்து பள்ளிகளிலும் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகள் மற்றும் கல்லூரி வகுப்புகளும் சுழற்சி முறையில் கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலமான கேரள மாநிலத்திலிருந்து பள்ளி கல்லூரிகளுக்கு வரும் மாணவ மாணவியர்கள் தினசரி வந்து செல்ல அனுமதியில்லை.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியருக்கான அனைத்து விடுதிகள் மற்றும் பணிபுரிபவர்களுக்காக செயல்படும் விடுதிகள் ஆகியவற்றில் தங்குபவர்கள் மற்றும் பணியாற்றுபவர்கள் என அனைவரும் தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதுடன், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
தற்போது கேரள மாநிலத்தில் நிலவி வரும் கொரோனா தோய்த் தொற்று பரவல் நிலையினைக் கருத்தில் கொண்டு அம்மாநிலத்திலிருந்து கல்லூரி கல்லி பயில வரும் மாணவ, மாணவியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதுடன், பரிசோதனை சான்றும் பெற்றிருப்பதை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களில் நடைபெறவுள்ள திருமண நிகழ்ச்சிகள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களை வாரத்திற்கு மூன் சம்பத்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் தெரிவித்து அனுமதி பெற வேண்டும் என அனைத்து திருமண மண்டப உரிமையாளர்களுக்கும் அறுவுறுத்தப்படுகிறது.
மாறாக முன் அனுமதியின்றி நடைபெறும் திருமணம் உள்ளிட்ட அனைத்து வித நிகழ்வுகளுக்கும் சம்மந்தப்பட்ட திருமண மண்டப உரிமையாளர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து நிலையான இயக்க நடைமுறைகளையும் பின்பற்றி 50 நபர்களுக்கு மிகாமல் திருமண நிகழ்ச்சி/ இதர நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாக பின்பற்றப்பட வேண்டியது அனைத்து பொதுமக்களின் கடமையாகும். மக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து கொரோனா தடுப்பு நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
- சீனி,போத்தனூர்.
Comments