விசா காலாவதி முடிந்ததால் நாடு திரும்ப ஆட்சியரிடம் உதவி கோரிய நெதர்லாந்து பெண்மணி!!

  -MMH

   வேலூர் மாவட்டத்தில் சமூக சேவைக்காக வந்து விசா காலம் முடிந்து தங்கியுள்ள நெதர்லாந்து பெண் நாடு திரும்ப உதவி செய்யக்கோரி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டார். 

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர் சென்னா மேரி (44) இவர் கடந்த 2019-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக வேலூர் வந்துள்ளார். தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அவர் ஊரடங்கு காரணமாக மீண்டும் நெதர்லாந்து திரும்ப முடியவில்லை. கையில் இருந்த பணமும் கரைந்த நிலையில் அவரது வங்கிக் கணக்கு முடங்கியது. பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட சென்னமேரி தனியார் ஓட்டலில் இருந்து வெளியேறி காட்பாடி காந்திநகர் ஜெகநாதன் நகரில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருக்க சிலர் உதவியுள்ளனர். ஆனால் தொடர்ந்து அங்கும் தங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உதவி செய்யுமாறு அதிமுக பிரமுகர் பாபு என்பவர் உதவியுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முறையிட்டார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன் அதிகாரிகள் கூட்டத்தில் இருந்ததால் ஆட்சியர் அலுவலக மேலாளர் பாலாஜி விசாரித்தார். பின்னர் அவரை சென்னை மற்றும் டெல்லியில் உள்ள நெதர்லாந்து நாட்டின் தூதரக அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் அறிவுரைகளை வழங்கி அனுப்பினார். 

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது பெண்மணியின் விசா காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. அவர் தற்போது சட்ட விரோதமாக தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் தங்கியிருந்தபோது முறையான பணப் பரிமாற்றம் இல்லை என்பதால் அவர் வங்கிக் கணக்கு முடங்கி இருக்கலாம். 

எனவே அவர் நாடு திரும்ப நெதர்லாந்து தூதரக அலுவலகங்களில் உதவியுடன் மத்திய அரசின் உதவியை நாடுவதாக வழிமுறைகள் குறித்து அவரிடம் எடுத்துக் கூறி அனுப்பிவைக்கப்பட்டார் என தெரிவித்தனர். 

-P. ரமேஷ், வேலூர்.

Comments