திருப்பத்தூரில் செல்போன் பறித்துச் சென்ற 2 பேர் எஸ்.எஸ்.கோட்டையில் பிடிபட்டனர்!!

      -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம் எஸ்.எஸ்.கோட்டை சோதனை சாவடியில் நேற்று செல்போன் பறித்து சென்ற இரண்டு வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். திருப்பத்தூர் சீதளி வடகரையை சேர்ந்த சேக் அப்துல்லா மகன் ஆசிக். இவர் தனது வீட்டிற்கு வெளியே சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் ஆஷிக்கிடம் காரைக்குடிக்கு வழி கேட்பதுபோல் அருகில் வந்து அவரது செல்போனை பறித்துச்சென்று விட்டனர். அப்போது அந்த வழியாக சென்ற திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த முதுநிலை காவலர் அன்பு, அவர்கள் மீது சந்தேகமடைந்து மதுரை சாலையில் அவர்களை விரட்டிச் சென்றார். 

அவர்கள் தப்பி விடவே, எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். எஸ்.எஸ்.கோட்டை காவல்துறையினர், காவல் நிலையத்தின் முன்புறம் உள்ள சோதனைச் சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரையும் அங்கு மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் இருவரும்  திண்டுக்கல் மாவட்டம், நத்தம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் அஜய்குமார் (வயது19) மற்றும் நத்தம் செட்டிகுலத்தெருவைச் சேர்ந்த சக்திவேல் மகன் தீனதயாளன் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments