சில்லரை தராத நடத்துனர்! கேள்விகேட்ட பயணியை 2 ஆண்டுகளாக அலைக்கழித்த மதுரை போக்குவரத்து கழகம்!! நடந்தது என்ன?

    -MMH

டிக்கெட் எடுத்த பணத்துக்கு நடத்துனர் சில்லறை கொடுக்காத விவகாரத்தில் மதுரை அரசு போக்குவரத்து கழக பொது தகவல் அலுவலருக்கு மாநில தகவல் ஆணையம் ரூ.3000 ஆயிரம் அபாரதம் விதித்துள்ளது. மதுரையில் இருந்து கோவில்பட்டிக்கு அரசு பஸ்சில் பயணம் செய்த கோவில்பட்டியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் என்பவருக்கு டிக்கெட் எடுத்த பணத்திற்கு சில்லறை கொடுக்காமல் இருந்த பிரச்னை தொடர்பாக புகார் அளித்தும், புகார் மனு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து 2 ஆண்டுகளாக முறையான தகவலை மதுரை அரசு போக்குவரத்து கழக பொது தகவல் அலுவலர் தரவில்லை என்பதால், மாநில தகவல் ஆணையம் ரூ.3000 ஆயிரம் அபாரதம் விதித்துள்ளது. மேலும் ஒரு வார காலத்திற்குள் தகவல் தரவும் உத்தரவு பிறப்பித்துள்ளது மட்டுமின்றி, நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் 25 ஆயிர ரூபாய் அபாரதம் ஏன் விதிக்க கூடாது என்று கேள்வி எழுப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கதிரேசன்கோவில் சாலை பகுதியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ். இவர் மசாலா பொருள்கள் விநியோகிஸ்தராக செயல்பட்டு வருகிறார். ஜெயப்பிரகாஷ் தனது வேலை நிமர்த்தமாக கடந்த 2018ம் ஆண்டு மதுரைக்கு சென்று விட்டு இரவு 11 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கோவில்பட்டி வர அரசு பஸ்சில் ஏறியுள்ளார். மதுரையில் இருந்து நாகர்கோவில் செல்லும் அரசு பஸ்சில் ஏறிய ஜெயப்பிரகாஷ் பயணித்துள்ளார். பேருந்து கிளம்பி சிறிது தூரம் சென்றதும் டிக்கெட் எடுப்பதற்காக ரூ.500 ஜெயப்பிரகாஷ் நடத்துனரிடம் கொடுத்துள்ளார்.

அதனை பெற்று கொண்ட நடத்துனர் சில்லறை இல்லை எனக்கூறி பஸ்சினை விட்டு கீழ இறங்க சொல்லியது மட்டுமின்றி அவதூறாக பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயப்பிரகாஷ் இரவு நேரம் என்பதால் பாதி வழியில் இறங்க முடியாது, திருமங்கலம் வந்ததும் அங்குள்ள கடைகளில் சில்லறை மாற்றி தருவதாக கூறியுள்ளார். திருமங்கலத்தில் பஸ் நிற்காது என்று கூறியவாறு நடத்துனர் சென்றுவிட்டதாக தெரிகிறது. ஆனால் திருமங்கலத்தில் 10நிமிடங்கள் பஸ் நின்றுள்ளது.

சில்லறை மாற்றி தருகிறேன் என்று தான் கொடுத்த 500 ரூபாயை ஜெயப்பிரகாஷ் கேட்டுள்ளார். ஆனால் நடத்துனர் டிக்கெட் மட்டும் கொடுத்து விட்டு 500 ரூபாய் தரவில்லை, மேலும் டிக்கெட் பணம் போக மீதி சில்லறையும் தரவில்லை என்று தெரிகிறது. பின்னர் கோவில்பட்டியில் பஸ் வந்து நின்றதும், ஜெயப்பிரகாஷ் நடத்துனரிடம் மீதி பணத்தினை கேட்ட போது, மதுரை புதுக்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

இதனால் மனமுடைந்த ஜெயப்பிரகாஷ் இதுதொடர்பாக மதுரையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை மேலாளருக்கு புகார் அனுப்பியுள்ளார். ஆனால் இவருடைய புகாரை கண்டுகொள்ள வில்லை. மேலும் தகவல் அறியும் சட்டத்தீன் கீழ் தகவல் கேட்டும் சரியான பதில் இல்லை என்பதால் ஜெயப்பிரகாஷ் , தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து மாநில தகவல் ஆணையத்தின் ஆணையர் தமிழ்க்குமார் முன்னிலையில் தொலைப்பேசி வழியாக இருதரப்பினர் இடையே விசாரணை நடத்தப்பட்டது.

இதன் முடிவில் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்ட ஜெயப்பிரகாஷ் மனுவிற்கு 2 ஆண்டுகளாக தகவல் வழங்காமல், மன உளைச்சல் மற்றும் பொருள் விரயத்தினை ஏற்படுத்தியதற்காக மதுரை அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ 3000 அபராதம் விதிப்பதாகவும், இதனை 15 தினங்களுக்குள் அவருக்கு வழங்கவேண்டும், மேலும் 7 நாள்களுக்குள் ஜெயப்பிரகாஷ் கேட்ட தகவல்களுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும் என்று மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் 2 ஆண்டுகளாக சரியான தகவல் தராமல் இருந்து பொது தகவல் அலுவலருக்கு நாள் ஒன்றுக்கு ரூ 250 வீதம் 25 ஆயிரம் அபாரதம் ஏன் விதிக்ககூடாது என்று கேள்வியும் எழுப்பியுள்ளது.

இதற்கிடையில் விசாரணை தொடங்குவதற்கு சில நாள்களுக்கு முன்பு ஜெயப்பிரகாஷ்-க்கு தர வேண்டிய மீதி தொகையாக 402 ரூபாயை மதுரை அரசு போக்குவரத்து கழகம் காசோலை அனுப்பியுள்ளது. இது குறித்தும் ஜெயப்பிரகாஷ் விசாரணையில் தெரிவித்துள்ளார். பஸ்சில் பலர் இருந்த போது தன்னை அவதூறாக பேசியது தனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் 2 ஆண்டுகளாக போராடி வருவதாகவும், தனக்கு பணம் என்பது முக்கியம் கிடையாது என்று பாதிக்கப்பட்டுள்ள ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

-வேல்முருகன், தூத்துக்குடி.

Comments