முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் செய்தியாளர்களைத் தாக்கிய அதிமுகவினர் கைது!

  -MMH

    முன்னாள் அமைச்சர் வீரமணி வீடு மற்றும் அவருடன் சம்மந்தப்பட்ட உறவினர்கள், பினாமிகள் என 28 இடங்களில் செப்டம்பர் 16 ஆம் தேதி காலை ரெய்டு நடந்தது. இந்த ரெய்டு குறித்த செய்திகள் வெளிவந்ததும் அதிமுகவில் உள்ள வீரமணியின் ஆதரவாளர்கள் ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டின் முன் குவிந்தனர். காவல்துறையினர் யாரையும் வீட்டினுள் செல்ல அனுமதிக்கவில்லை. அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள், 'முன்னாள் அமைச்சரான வீரமணி வீட்டுக்குள் உள்ளார். அவரை நாங்கள் பார்க்கவேண்டும்' எனச் சட்டம் பேசினர். காவல்துறை அதனை கண்டுகொள்ளவில்லை. அதேநேரத்தில் வாணியம்பாடி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ சம்பத்குமார் தலைமையில் அதிமுகவினர் காவல்துறைக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

நிகழ்வுகளை செய்தியாகப் பதிவு செய்து கொண்டிருந்த தினகரன் மற்றும் சன் நியூஸ் தொலைக்காட்சியின் செய்தியாளர் கணேஷ்குமார் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தினர். காவல்துறை தலையிட்டு செய்தியாளரின் உயிரைக் காப்பாற்றியது. முன்னாள் எம்.எல்.ஏ சம்பத்குமார் நாக்கைக் கடித்து செய்தியாளரை மிரட்டினார். சன் டிவியின் சேலம் மண்டல செய்தியாளர் குமரேசன் மீதும் தாக்குதல் நடத்தினர். இது அங்கிருந்த மற்ற செய்தியாளர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது. அதனை எதிர்த்து கேள்வி எழுப்பிய மற்ற செய்தியாளர்களையும் மிரட்டினர் அதிமுக நிர்வாகிகள்.

இது குறித்து திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் செய்தியாளர்கள் ஜோலார்பேட்டை காவல்நிலையத்துக்குச் சென்று அதிமுகவினர் மீதும், முன்னாள் எம்.எல்.ஏ சம்பத்குமார் மீதும் புகார் தந்தனர். செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அதிமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில் தற்போது, ஜோலார்பேட்டையில் செய்தியாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் வாணியம்பாடி வள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் கிரி(50), முன்னாள் எம்எல்ஏ கோ.வி்.சம்பத்குமாரின் கார் டிரைவரான வாணியம்பாடி செக்குமேடு பகுதியை சேர்ந்த கோவிந்தன்(26) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 7 பேரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் பல்வேறு சம்பவங்களில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டாலும், அரசு மௌனமாக வேடிக்கை பார்த்தது. ஆனால் தற்போது திமுக ஆட்சியில் பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கை, பத்திரிக்கையாளர்கள் இடையே எழுந்துள்ளது.

- பாரூக், சிவகங்கை.

Comments