மேற்கு புறவழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரம் - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல் !

 

-MMH

      கோவையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலக்காடு சாலையில் இருந்து மாநகர பகுதிக்குள் நுழையாமல் நரசிம்மநாயக்கன் பாளையம் வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைய மேற்கு புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த புறவழிச்சாலை பாலக்காடு ரோடு சுகுணாபுரம் பகுதியில் தொடங்கி மதுக்கரை,  சுண்டக்காமுத்தூர், பேரூர் செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி,மேற்கு சித்திரைச்சாவடி, கலிக்க நாயக்கன்பாளையம், வடவள்ளி, சோமையம்பாளையம், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம், குருடம்பாளையம், நரசிம்மநாயக்கன்பாளையம் ,கூடலூர்  கவுண்டம்பாளையம் வழியாக மொத்தம்   32.43 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படுகிறது.

இதற்கான நில எடுப்பு மற்றும் திட்ட செயல்பாடுகள் குறித்து மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது ; மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த 122.49 எக்டேர் தனியார் நிலமும் 20.51எக்டேர் அரசு நிலமும் ஆகமொத்தம் 143 எக்டேர் நிலம் தேவைப்படுகிறது.       ரூ .1700 கோடி திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ .320 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மதுக்கரை, சுண்டக்காமுத்தூர் , பேரூர்  செட்டிபாளையம், தீத்திபாளையம், மாதம்பட்டி உள்பட 5 வருவாய் கிராமங்களில் நிலம் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.இதில் பெரும்பாலான பணிகள் முடிந்துள்ளது. மற்ற பகுதிகளில் படிப்படியாக   நடைபெற்று வருகிறது. இத்திட்டத்திற்கு முதல் கட்டமாக சுகுணா புரத்திலிருந்து மாதம்பட்டி வரை 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரையிலான சாலை அமைக்கும் பணி தொடங்கும் .இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக, கோவை மாவட்ட தலைமை நிருபர்

-S.ராஜேந்திரன்.

Comments