தொழில் நஷ்டம் காரணமாக எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை!!
கோவையில் தொழில் நஷ்டம் காரணமாக வீட்டில் இருந்து மாயமான எலெக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (54). இவர் கோவை காட்டூர் பகுதியில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கொரோனா பொதுமுடக்கம் காரணமாக தொழில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு பொருளாதார ரீதியில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஜெயக்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.
இந்த சூழலில், கடந்த 7ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மாயமாகினார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் ஜெயக்குமாரின் மனைவி மங்கையர்கரசி, வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று காலை பவானி லெட்சுமி நகர் பகுதியில் ஜெயக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த போலீசார், ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-சுரேந்தர்.
Comments