பொள்ளாச்சி வழியாக தொடர்வண்டி அதிவேக சோதனை ஓட்டம்!!

  -MMH

   திண்டுக்கல் பாலக்காடு இடையே பொள்ளாச்சி வழியாக தொடர்வண்டி அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு நடத்தப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். திண்டுக்கல்லில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு மற்றும் 

போத்தனூர் இடையேயான மீட்டர் கேஜ் ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி வழியாக கோவை, சென்னை, திருச்செந்தூர், திருவனந்தபுரம், பாலக்காடு, உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் இயக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக தற்போது சென்னை, திருவனந்தபுரம், மதுரைக்கு, மட்டும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் திண்டுக்கலில் இருந்து பொள்ளாச்சி வழியாக பாலக்காடு வரை ரயில் அதிவேகமாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. திண்டுக்கல்லில் இருந்து ஒரு இன்ஜின் உள்பட  3 பெட்டிகளுடன் காலை 9 மணிக்கு புறப்பட்ட ரயில் பாலக்காடு க்கு பகல் 12 30 மணிக்கு சென்று அடைந்தது. பின்னர் பாலக்காட்டில் இருந்து புறப்பட்டு வந்த ரயில் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று (சனிக்கிழமை) பொள்ளாச்சியிலிருந்து போத்தனூர், மேட்டுப்பாளையம், வரை ரயில் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது;

"தற்போது திண்டுக்கல்லில் இருந்து பழனி வரைக்கும் 75 கிலோ மீட்டர் வேகத்திலும், பொள்ளாச்சி பழனி இடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும், பொள்ளாச்சி பாலக்காடு இடையே 100 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில் இயக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த வழித்தடத்தில் 100 கிலோ மீட்டர் முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி தண்டவாளத்தில் உறுதி தன்மையை துல்லியமாக கண்டறிய ரயில் சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதன்மூலம் தண்டவாளத்தில் எந்த இடத்தில் அதிர்வு  உள்ளது என்பதை கண்டறிந்து சரி செய்யப்படும்." என்று அவர்கள் கூறினார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments