தொலைந்து போன 141 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர்!!

  -MMH

   கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொலைந்து போன செல்போன்களை மீட்ட போலிசார் அதனை உரியவர்களிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி சுஹாசினி தலைமையிலான போலீசார் தொலைந்து போன செல்போன்களை மீட்டு அவற்றை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து உரியவரிடம் ஒப்படைத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம்;

கோவை மாவட்டம் முழுவதும் தொலைந்து போன செல்போன்கள் குறித்து புகார் கிடைத்ததும் சி.எஸ்.ஆர் பதிவு செய்து அதனை மீட்கும் முயற்சியில் கோவை மாவட்ட காவல்துறை இறங்கியுள்ளதாகவும் கடந்த மாதம்  125 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும் இதனைத்தொடர்ந்து 347 புகார்கள் நிலுவையில் இருந்த நிலையில் அதில் 141 செல் போன்கள் தற்போது மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடிப்பது சிரமமான விஷயம் எனவும் இதற்கு கால தாமதம் ஏற்படலாம் எனவும் ஆனால் செல்போன் தொலைந்து போனால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திலோ அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்படும் சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ புகார் அளித்தால் விரைந்து கண்டு பிடிக்கலாம் என தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்து போன செல்போன்களையும் மீட்டுள்ளதாகவும் கூறினார். செல்போன்களை தொலைத்தவர்களிடம் கேட்ட கருத்துக்களின் படி, அவர்கள் அஜாக்கிரதையாக இருந்தது தெரிய வருவதாகவும் எனவே பொது இடங்களில் செல்போன்களை வைக்காமல் கவனமாக இருக்க வேண்டுமென கேட்டு கொண்டார். 

அதேபோல் செல்போன் கடை வைத்திருப்பவர்களிடம், ஒரே நபர் மீண்டும் மீண்டும் செல்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்தால் தகவல் தெரிவிக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளதாகவும் செல்போன்கள் தொலைந்து போனால் 'டிஜி-காப்' என்ற செயலி மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.




Comments