2ஜி விவகாரத்தில் பொய் சொன்னது உண்மை! பகிரங்க மன்னிப்பு கேட்ட முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய்!

 

   -MMH

   2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான கருத்தை தெரிவித்ததற்காக முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபமிடம், முன்னாள் சிஏஜி வினோத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரினார்.

2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் அர்னாப் கோஸ்வாமிக்குத் தந்த பேட்டியில் '2ஜி ஊழல் தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெயரை சேர்க்கக்கூடாது என்று தன்னை காங். எம்.பி சஞ்சய் நிருபம் நிர்பந்தித்ததாக' வினோத் ராய் கூறியிருந்தார்.

2ஜி விவகாரத்தில் தன் மீது அவதூறு பரப்பியதாக வினோத் ராய் மீது சஞ்சய் நிருபம் டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பொய்யான அறிக்கை அளித்ததற்காக வினோத் ராய் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சஞ்சய் நிருபம் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை டெல்லி பாட்டீயாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வினோத் ராய், சஞ்சய் நிருபமிடம் மன்னிப்பு கேட்டு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை நேற்று (அக்.28) தாக்கல் செய்துள்ளார்.

அதில்," 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தின் சிஏஜி அறிக்கையில் இருந்து அப்போதைய பிரமதர் மன்மோகன் சிங்கின் பெயரை நீக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுத்த எம்.பிக்களில் சஞ்சய் நிருபமும் ஒருவர் என கவனக்குறைவாகவும் தவறுதலாகவும் நான் குறிப்பிட்டுவிட்டேன். சஞ்சய் நிருபம் குறித்து நான் எழுதிய, நேர்காணலில் கூறிய அனைத்து கருத்துக்களும் தவறானது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். நான் கூறிய கருத்துக்களால் சஞ்சய் நிருபமும், அவரது குடும்பத்தினரும் அடைந்திருக்கும் மனவேதனையை புரிந்துகொள்கிறேன். எனவே, அவர்களிடம் எனது நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன்.

சஞ்சய் நிருபம் மற்றும் அவரது குடும்பத்தினர் எனது இந்த மன்னிப்பை ஏற்றுக்கொண்டு வழக்கை முடித்துவைப்பார்கள் என நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

வினோத் ராயின் இந்த மன்னிப்பை சஞ்சய் நிருபம் ஏற்றுக்கொண்டார். இதன்பின்னர், சஞ்சய் நிருபம் தொடர்ந்த வழக்கை முடித்துவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சஞ்சய் நிருபம், “2ஜி மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு குறித்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது தவறான அறிக்கை சமர்ப்பித்து அவதூறு கிளப்பிய குற்றத்திற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

2ஜி, நிலக்கரி விவகாரங்களில் மன்மோகன் சிங் மீதும், காங்கிரஸ் - யூபிஏ அரசு மீது வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் அவதூறானவை என்பது வினோத் ராய் சமர்பித்துள்ள இந்த பிரமாணப் பத்திரம் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது' என காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தலைமை செய்தித்தொடர்பாளருமான ரன்தீப் சுர்ஜீவாலா தெரிவித்துள்ளார்.

- பாரூக், சிவகங்கை.

Comments